எண்ணிறிரு விளக்குநெடு நாளெல்லா மெரித்துவரப் புண்ணியமெய்த் தொண்டர்செயல் புலப்படுப்பா ரருளாலே உண்ணிறையும் பெருஞ்செல்வ முயர்த்தும்வினைச் செயலோவி் மண்ணிலவ ரிருவினைபோன் மாண்டதுமாட் சிமைத்தாக. | 8 | (இ-ள்) எண்ணில்......வர - எண்ணில்லாத திருவிளக்கு நீண்ட நாட்கள் முழுமையும் எரித்து வரவே; புண்ணிய.....அருளாலே - சிவ புண்ணியத்தின் உறைப்புடைய அந்த மெய்த் தொண்டரின் செயலை உலகறியச் செய்வாராகிய இறைவரது திருவருளினாலே; உண்ணிறையும்...ஓவி - உள்ளே நிறைந்து மீக்கூர்ந்த பெரிய செல்வமானது மேலும் பெருக நிகழும் தொழில்செய்தல் நீங்கவே; மண்ணில்....மாட்சிமைத்தாக - உலகில் அவரது இருவினைகளும் மாண்டொழிந்தன போலச், செல்வம், மாட்சிமை யடையும்படி மாண்டது. (வி-ரை) எண்ணில் - விளக்குக்களின் அளவற்ற தன்மையும்; நெடுமை - அனேகம் என்ற தன்மையும்; நாள் எல்லாம் - நாள் முழுதும் அல்லும் பகலும் என்ற நிலையும் உணர்த்தின. செயல் புலப்படுப்பார் - செயலினை உலகமறியச் செய்வாராகிய இறைவருடைய; புலப்படுத்தல் - அன்பின் நெறியினை உலகுக் கறிவித்துக் காட்டியுய்வித்தல்; இளையான்குடி மாறனார் சரித முதலியவை காண்க. புலப்படுப்பார் - வினைப்பெயர் ; ஆறனுருபு தொக்கது. உயர்த்தும் வினைச்செயல் ஓவி - “நின்று தின்றாற் குன்றும் மாளும்Ó என்பது பழமொழி; எத்துணைப் பெருஞ் செல்வமாயினும் மேல் உயர்த்தும் செயலின்றி உள்ளதனையே செலவிட்டு வந்தால் ஒருநாள் மாய்வது திண்ணம். உயர்த்தும் வினைச் செயலாவது மேலோங்குவிக்கும் வருவாய் செய்யும் தொழில்; ஓவுதல் - நீங்குதல். இருவினை மாண்டதுபோல என்க. வினைபற்றி வந்த உவமம். மெய்ச் சிவ புண்ணியத்தினால் இருவினையும் போயொழியும்; அதுபோல அவரது செல்வமும் மாண்டது. மாளுதல் - ஒழிதல்; மாண்டது மாட்சிமைத்தாக - சொற்சிலேடை; மாண்டது - மாண்புடைத்தாயிற்று என்றதொரு தொனிக் குறிப்பும் தருதல் காண்க. சிவநெறிச் செல்லா ஏனையோர் செல்வம் மாளும்போது அல்லற்படுத்துப் பவநெறியில் ஒழியும். இங்கு அவ்வாறன்றிச் சிவபுண்ணியப் பேற்றினால் செல்வமாளினும் மாட்சிமைத்தாகவே - பெருமை தருவதாகவே - மாண்டது என்பதாம். |
|
|