அப்பணியால் வரும்போறு மவ்வினைஞர் பலருளராய் எப்பரிசுங் கிடையாத வகைமுட்ட விடருழந்தே யொப்பின்மனை விற்றெரிக்கு முறுபொருளு மாண்டதற்பின் செப்பருஞ்சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார், | 12 | (இ-ள்) அப்பணியால்....முட்ட - அந்தத் தொழிலால் கிடைக்கும் கூலிப் பொருளும் அத்தொழில் செய்வோர் பலர் உளராதலினாலே எவ்வகையாலும் கிடைக்காதபடி முட்டுப்பாடு பொருந்தவே; இடருழந்தே - மிகவும் துன்பப்பட்டே; ஒப்பின்....மாண்டதற்பின் - ஒப்பற்ற பெருமையுள்ள தமது வீட்டினை விற்று எரிக்கும் அப்பொருளும் தீர்ந்தபின்; செப்பருஞ்சீர்......தேடுவார் - சொல்லுதற்கரிய,சிறப்பினையுடைய தமது மனைவியாரை விற்றுப் பொருள் பெற்றும் பணி செய்வதற்கு வழி தேடுவாராய், (வி-ரை) அப்பணியால்......கிடையாத - வகைமுட்ட - இது உலகியற் பொருணூலின் உண்மைகளுள் ஒன்று; ஒரு தொழிலால் வரும் ஊதியம் அத்தொழிலையே செய்வோர் பலராயினபோது பங்கிடப்பட்டு அவ்வவர் பெறும் பொருள் சிறிதாகும் என்பது; Fall of income due to competition என்பர் நவீனர். இடருழந்தே - துன்பத்தால் வருந்தி; பணிமுட்டுதலினால் வரும் துன்பம்; முன் “தளரும் மனம்Ó( 4031) என்றதும், மேல் தளர்வெய்திÓ (4034) என்பதும் காண்க. ஒப்பின்மனை.....மாண்டதற்பின் - மனை - வீடு - இல்லம்; தொழில் செய்வினையாற் கூலி கிடையாதபோது தமது மனையினை விற்று விளக்கிட்டார்; அப்பொருளும் மாண்டது; அதன்பின் .- என்ற இத்துணையும் கருத மனை விற்றெரிக்கும் உறுபொருள் என்று சுருக்கிக் கூறியது கவிநயம். அன்பர்கள் வருந்தும் நிலைகளை விரித்துக்கூறாமலே சுட்டிக் காட்டிச் செல்லும் ஆசிரியரது மரபுமாம். ஒப்பின் மனை - நாயனாரது திருமனையாதலாலும், சிவன் திருவிளக்குப் பணிக்குச் சாதனமாக உதவியதாலும் ஒப்பில்லாததாயிற்று; இவ்வாறே முன் “அந்தமின் மனைÓ (458) என்றதும் காண்க. உறுபொருள் என்ற கருத்துமிது. மனையாரை விற்பதற்குத் தேடுவார் - அடிமைகளையும் மனைவியரையும் தம்மையும் விலைப்பண்டங்களாகக் கொண்ட கடன் வாங்குதலும் விலைப்படுத்துதலும் முன்னாளில் வழக்கிலிருந்த. “தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன கொண்டுÓ (446); “நாடிய வடிமை விற்றும்Ó (838); ஆள் அடைமானப் பத்திரம் என்பன இந்நாளிலும் வழக்கிலுள்ளன. அரிச்சந்திரன் கதை முதலியனவும் காண்க. தேடுவார் - வகையினைத் தேடுவாராகி; முற்றெச்சம். தேடுவார் - கிடையாமல் எய்தினார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|