பாடல் எண் :4059

ஆயசெயன் மாண்டதற்பி னயலவர்பா லிரப்பஞ்சிக்
காயமுயற் சியிலரிந்த கணம்புல்லுக் கொடுவந்து
மேயவிலைக் குக்கொடுத்து விலைப்பொருளா னெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார் துளக்கறுமெய்த் தொண்டனார்.
5
(இ-ள்) ஆயசெயல் மாண்டதற்பின் - அவ்வாறாகிய அந்தச் செய்கையும் (மனையில் விற்றற்குப் பொருளின்மையால்) நீங்கிய பின்பு; அயலவர்பால் இரப்பு அஞ்சி - பிறர்பால் இரத்தற்றொழிலை அஞ்சி; காய முயற்சியில்....நெய்மாறி - தமது உடம்பின் முயற்சியாலே அரிந்த கணம்புல்லினை அரிந்தெடுத்துக்கொண்டு வந்து கிடைத்த விலைக்குக் கொடுத்து அவ்வாறு பெற்ற விலைப் பொருளினாலே நெய்வாங்கி; தூய.....தொண்டனார் - அசைவில்லாத மெய்ம்மைத் தொண்டுபுரிவாராகிய நாயனார் தூய்மையாகிய திருவிளக்கினை எரித்தனர்.
(வி-ரை) ஆயசெயல் - இல்லிடை உள்ளன மாறி எரிக்கும் செயல்; ஆய் - முன்கூறிய அவ்வாறு ஆகிய.
மாண்டதற்பின் - செயல்மாறுதலாவது செய்ய வியலாதொழிதல்; மேலும் மாறுதற்குரிய பொருள்கள் இல்லாமையால் அச் செயலும் ஒழிந்தது என்க.
அயலவர்பால் இரப்பு அஞ்சி - திருக்குறள் "இரவச்சம்" என்ற அதிகாரத்துட் கூறியவை ஈண்டுக் கருதற்பாலன; "ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற், கிரப்பி னிளிவந்த தில்" என்பது முதலியவை காண்க; "இதனால் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்ட"தென்பது பரிமேலழகருரை; இதனால் எந்தம் பெருமக்கள் தமது முயற்சியான் வரும் பொருளை உட்கொண்ட மேம்பாடு காணத்தக்கது; கலிய நாயனார் வரலாறும், பிறவும் காண்க. இனி, இப்பெரியோர்கள், செய்த இச்செயல்களும், மேற்கொண்ட கொள்கைகளும், தாம் உயிர் வாழ்தற் பொருட்டன்றிச், சிவன் பணி மேற்கொண்ட நிலையில் வருவன என்பதை உணர்ந்தபோது, இவர்க்கீடாவார் உலகில் வேறிலர் என்பது இனிது விளங்கும்.
காயமுயற்சி - இதுவரை ஏனைப்பொருள்களின் சார்பினையே பற்றிச்செய்த அறத்தினை, இனித் தம் உடல் முயற்சி துணையாகச் செய்ய மேற்கொண்டனர்; "செல்வந் தலைநின்ற பயனிது" என முன்னர்த் துணிந்து, பொருட்பற்றிப் பூசனை செய்த இவர், இப்போது உடல்பெற்ற பயனும் இதுவே யாம் என்று உடலால் வருந்தி முயன்று அதன் பயனாற் பணி செய்யலாயினர்.
கணம்புல் - ஒருவகைப்புல்; மெல்லிதாய் வீடு வேய்தல் முதலியவற்றுக்குப் பயன்படுவது; இது சிறு காடுகளிலும் குன்றிடச் சாரல்களிலும் மிகுதியாய்க் கிடைப்பது; இப்புல் பச்சைமலை கொல்லிமலைச் சாரல்களில் பெரும்பான்மை காணப்படும். இப்புல்லினை அரிந்து கொடுவந்து விற்கும் தொழிலினை இந்நாயனார் வறுமை வந்தபோது தமது ஊரில் (இருக்கு வேளூரில்) செய்து பழகினர்; அன்றிப், பிறர் செய்தலைக் கண்டறிந்தனர் என்பது கருதப்படும்.
விலைப்பொருளால் - புல் விற்ற விலைப்பொருளினால்; துளக்கு அறும் - அசைவில்லாத; பிறழாத; துளக்கம் - சலிப்பு;