மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து வண்டமிழின் றுறையான பயன்றெரிந்து சொல்விளங்கிப் பொருண் மறையக் குறையாத தமிழ்க்கோவை தம்பெயராற் குலவும்வகை முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பாற்பயில்வார்;
| 1 | (இ-ள்) மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து - மறையோர்கள் மிக்கு வாழ்கின்ற திருக்கடவூரில் வந்து தோன்றி்; வண்டமிழின்.....தொகுத்தமைத்து - வளப்பமுடைய தமிழது இனிய துறைகளிலாகிய பயனைத் தெரிந்து சொல்விளங்கி உட்கிடையான பொருள் மறையும்படி குறைவில்லாத தமிழ்க் கோவையினைத் தமது பெயராலே விளங்கும்படி முறைப்படத் தொகுத்து இயற்றி; மூவேந்தர்பாற் பயில்வார் - தமிழ் முப்பெருவேந்தர்களிடத்தும் சென்று பயில்வாராகி. (வி-ரை) மறையாளர் திருக்கடவூர் - மறையவர்கள் மிக்குவாழும் பதி; “ஏய்ந்தசீர் மறையோர் வாழு மெயிற்பதி Ó (831). தமிழின் துறையான பயன் - துறை - இவை அகமும் புறமுமாம். இன் - இனிய; ஆன பயன் - உயிர்க்கு ஊதியமாகிய பயன்; அகப்பொருட்டுறைகளில் இறைவன் - அடியார்பாற் கூட்டமும், புறப்பொருட்டுறைகளில் பாசங்களை எறியும் ஞான வெற்றியும், இவற்றால் வீடுபேறு பெறுதலுமாம். இவரது நூல்கள் இவர் வீடு பெறச் சாதனமாயினமை காண்க. வண் தமிழ்த்துறையாகிய மெய்ப்பொருளுணர்ந்து; சொல் விளங்கிப் பொருள்மறைய - சொற்கள் விளக்கமாகி உள்ளுறை பொருளாகிய வீடு பேற்றின் நிலை வெளித்தோன்றாது கிடக்க “அறிவனூற் பொருளு முலக நூல் வழக்குமென, விருபொருளு நுதலி எடுத்துக் கொண்டனர். ஆங்கவ் விரண்டனுள், ஆகம நூல் வழியி னுதலிய ஞான யோகநுண் பொருளினை யுணர்த்துதற் கரிதுÓ என்று திருக்கோவையாருரை முகத்துப் பேராசிரியர் உரைத்தவை ஈண்டு நினைவு கூர்தற்பாலன; திரிபு முதலிய சொல்லணிகளை உடைய செய்யுட்கள் சொல்விளங்கிப் பொருண் மறைய உள்ளன; இக்கருத்தை ஆசிரியர் இப்புராணத் தோற்றுவாயினும் (4063), முடிப்பி்னும் (4069) காட்டியருளுதல் காண்க. இறைவர் புகழை உள்ளுறையாகக்கொண்டு பாடும் அகத்துறை, புறத்துறைப் பாட்டுக்களின் உள்ளுறைகளும் அவ்வாறேயாம். குறையாத தமிழ்க்கோவை தம் பெயராற் குலவும் வகை முறையாலே தொகுத்தமைத்து - என்றதனால் காரிக்கோவை என்றதோர் அகப்பொருட்டுறைக் கோவை நூல் இவரால் செய்யப்பட்டதென்று தெரிகிறது. இந்நூலைப் (அல்லது நூல்களைப்) பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை; முறை - தமிழ் இலக்கணம் வகுத்த முறை; தொகுத்து - சொற்பொருட் பாகுபாடுகள் சிறக்கும்படி சேர்த்து; அமைத்தல் - இயற்றுதல். இஃது இநாயனார் இறைவர்பாற் செல்லும் வகையால் உயிர்க்குறுதியாக அமைத்த நூல். மூவேந்தர் பாற்பயில்வார்- தமிழ் முடிமன்னர் மூவர்கள். சேர சோழ பாண்டியர்கள். பாலும் என முற்றும்மை விரிக்க. பயிலுதல் - சென்று பழகிய நட்புப் பெற்று ஒழுகுதல். பயில்வார் - நயமாக்கிப் - பெற்ற - குவைகொண்டு - சமைத்தார் என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க. |
|
|