பாடல் எண் :4070

அந்நாளி லாளுடைய பிள்ளையா ரருளாலே
தென்னாடு சிவம்பெருகச் செங்கோலுய்த் தறமளித்துச்
சொன்னாம நெறிபோற்றிச் சுரர்நகர்க்கோன் றனைக்கொண்ட்
பொன்னார மணிமார்பிற் புரவலனார் பொலிகின்றார்,
2
(இ-ள்) அந்நாளில்.....பெருக - அக்காலத்தில் ஆளுடைய பிள்ளையாரது திருவருளினாலே பாண்டிநாட்டிற் சைவத்திறம் பெருகியிட; செங்கோல்.....போற்றி - செங்கோல் அரசாட்சி செய்து அறநெறி வழுவாமற் காத்தும் எடுத்துச் சொல்லப்படும் சிவநாமமாகிய திருவைந் தெழுத்தின் நெறியாகிய சைவநெறியினைக் காத்தும், சுரர்நகர்க்கோன்.....பொலிகின்றார் - தேவேந்திரனிடத்துக் கொண்ட பொன்னாரமணிந்த மார்பினையுடைய அப்பாண்டியனார் விளங்குகின்றாராகி;
(வி-ரை) முன்பாட்டினாலும் இப்பாட்டினாலும் இந்நாயனாரது சரித வரலாற்றினையும் பண்பினையும் பற்றிய முற்பகுதியினை ஆசிரியர் கூறியருளிய கவிநயமும் காவியப்பண்பின் சிறப்பும் கண்டுகொள்க. இவை முன் ஆளுடைய பிள்ளயார் புராணத்தினுள் விரித்துக் கூறியருளியமையால் ஈண்டுச் சுருக்கிச் சுட்டிக்கூறிய அளவில் அமைந்தார். அந்த முற்பகுதியினுள்ளும் ஆளுடைய பிள்ளையாரது திருவருள் பெறும்முன் நிகழ்ந்த நிலையினை முன் ஒரு பாட்டினாலும், அதன் பின் நிகழ்ந்துள்ள நிலையினைப் பின் ஒரு பாட்டானும் வகுத்துரைத்த கவிச்சிறப்பும் காண்க; இங்குத் தொகைநூலுள் இந்நாயனார் “நெல்வேலி வென்றÓ தன்மை பற்றியே போற்றப் படுதலால், அதுபற்றியே விரிநூலாகிய இப்புராணத்தினுள்ளும் ஈண்டும மேல் போட்டுக்களால் விரித்துக்கூறி முடித்த தகுதியும் கண்டுகொள்க. முன் பாட்டுச் சமணர் தொடக்கும் அதினின்றும் விடுபடும் நிலையும் கூறியது. இப் பாட்டு அவ்வாறு விடுபட்டபின் சைவத்திறத்திற் சிறந்த தன்மைபற்றிக் கூறியது. மேல்வரும் ஆறு பாட்டுக்கள் நெல்வேலி வென்ற திறம்பற்றி விரித்துரைத்தன.
தென்னாடு- பாண்டியநாடு; பரதநாட்டின் தெற்கிருத்தலால் தென்னாடெனப்படும். தென் - அழகிய என்றலுமாம்.சிவம்பெருக - சிவமணங்கமழ என்க; சைவநெறி சிவம் எனப்பட்டது உபசாரம்; சிவம்பெருக - மங்கலம் பொலிய என்றலுமாம்.
அறம் அளித்தல் - உலகியல் தருமநீதி செலுத்துதல். நாமநெறி போற்றல் - சிவாகம சைவநெறியினைப் பற்றிச் சிவநாமமாகிய திரு வைந்தெழுத்தின் நெறியினைக் காத்தல்.
சிவம் பெருக - இதுபற்றி அரசாட்சியில் உலகம் முழுதும் சிவநெறி நின்றுய்ந்து பெருகும்படி “கிளரொளித் தூய்மை செய்தே, வாழியப் பதிக ளெல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்Ó (2770) “மதுரை வாழ்வார், துன்னிநின் றார்க ளெல்லாந் தூயநீ றணிந்து கொண்டார்Ó (2755) என்று முன் கூறியவை காண்க.
சொல் நாமநெறி போற்றி - முன் கூறியது உலகத்தைப்பற்றியது; இங்குக் கூறியது அரசர் தம்மைப்பற்றியது; நாமம் - சிவனாமமாகிய திருவைந் தெழுத்து; போற்றுதல் - கைவிடாது அவ்வழி ஒழுகுதல்; நாமநெறி - சிவனாமம்பற்றியநெறி; சொல் - சொல்லாகிய; சொல் - முறைகளால் எடுத்துச் சொல்லப்பட்ட என்றலுமாம்.
சுரர்...பொன்னார மணிமார்பில் - சுரர் நகர்க்கேரன் - இந்திரன் ஒரு காலத்தில், தமிழ் நாட்டில் மழைமறுக்க, அகத்திய முனிவர் அருளியவாறே சோமவார விரத நியமம் பூண்டு உக்கிரகுமாரபாண்டியர், மழையினைவேண்டிச் சோழ சேர மன்னர்களுடனே இந்திரன் சபையினை அடைய, அவ்விருவரும் அவன் காட்டிய ஆதனத்தினிலமரத், தாம் அவ்வாறிராது அவனுடன் ஒருங்கே இருந்தபோது, அவன் பொறாமை கொண்டு அவருக்குப் பரிசு தருவானைப்போலத் தாங்குதற்கரிய பொன்னாரத்தை அளிக்க, அனைப் பூமாலைபோல எளிமை பெறத்தாங்கினார் என்பது வரலாறு. திருவிளையாடற் புராணத்துட் பார்க்க; உக்கிரகுமார பாண்டியர் செய்த அரிய செயல்போலவே அவர்பின் வருவாரும் அவ்வாரந் தாங்குதலின் இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் மரபின் முந்தையோர் பண்பு அவர்பின் வருவோர்க்கும் கூட்டி உரைப்பதும் மரபாம். மேல் “வடிவேல் வாங்கிடÓ ( 4072) “சயத் தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படிÓ (4073) என்ற வரலாறுகளும், உக்கிரகுமார பாண்டியர் கடல்சுவற வேல்விட்டதும், மேகங்களைச் சிறையிட்டதும் ஆகிய திருவிளையாடற்புராண வரலாறுகளைக் குறித்தன. தனை - தன்பால்.
பொலிகின்றார் - கடக்கின்றாராய்ப் (4071), பெருக (4072), தயங்கப் (4073) பிறங்கப் (4074), புனைந்து (4075) அரசளித்தார் (4076) என்று இவ்வேழுபாட்டுக்களையும் கூட்டித் தொடர்புபடுத்தி முடித்துக் கொள்க. பொலிகின்றார் - பொலிகின்றாராகி; முற்றெச்சம்.