மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த் தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம் நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார் தன்மை வாயிலா ரென்னுந் தபோதனர். | 6 | (இ-ள்) மன்னு........மாநகர் - நிலைபெற்ற சிறப்பினையுடைய திருமயிலாபுரி என்னும் இப்பெருந்திரு நகரிலே; தொன்மை...தோன்றினார் - பழமையால் நீண்ட சூத்திரரென்னும் பழங்குலமானது நன்மைக ளெல்லாவற்றுள்ளும் சிறந்த நலம்பெறும்படி வந்தவதரித்தனர்; தன்மை....தபோதனர் - உயர் தன்மை பெற்ற வாயிலார் என்னும் பெயரினையுடைய தவப்பேறுடையவர். (வி-ரை) தொன்மை நீடிய...தொல்குலம் - தொன்மை - தொல் என்ற அடுக்கு மிகுதி குறித்தது; மேல் நன்மை சான்ற நலம் - என்றது மிவ்வாறே மிகுதிக் குறிப்பாம். மிகப் பழைமை என்பதும், நன்மைகளுள் எல்லாம் மிக்க நன்மையாகிய செம்மைப் பண்பு என்பதும் கருத்து. நீடிய - நீடித்து வாழ்கின்ற; சூத்திரத் தொல்குலம் - வேளாளர் குலம்; உமாபதி சிவாசாரியர் திருத்தொண்டர் புராண வரலாற்றினுள் இந்நாயனாரை வேளாளர் பதின்மூவருள் வைத்து வகுத்துப் போற்றி யிருத்தல் காண்க. “வேளாளர் பதின்மூவர் மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோட்புலியார் சத்திÓ (39). சூத்திரர் என்ற பெயர் இழிபுப் பொருள் கொண்டதென்றும், இதனை வேளாளர்க்கு இட்டு வழங்கிப் பார்ப்பனர் இழிவு படுத்தினர் என்றும் கொண்டு, இந்நாளில் இதுபற்றிப் பெரும் பூசலும் பகைமையும் விளைகின்றன; அப்பெயர் இழிவுப் பொருள் கொண்டதன்று ஆசிரியர் முதலிய பெரியோர் வழக்கினால் அறியப்படும். உயர்வு இழிவு என்ற இருபொருளும் அது பெறவழக்கினும், இழிவை விடுத்து, உயர்வையே கொள்ளுதல் மரபிலக்கணம். சூத்திரன் என்பதற்கு திட்பநுட்பம் அமைந்த மந்திராதிகாரமுடையவன் என்பது பொருளாம்; இதுபற்றி முன் “நம்பு வாய்மையி னீடு சூத்திர நற்குலம்Ó (440) என்ற விடத்துரைத்தவை பார்க்க. (1 - பக் 546) குலம் - நலம்பெற - குலம் விளங்க. குலமானது இவர் அதனில் வந்தமையால் நன்மை பெற என்க. நலம் - சிவநலம். தன்மை வாயிலார் என்னும் - நற்றகுதிப்பான்மை காரணமாக வாயிலார் என்னும் காரணப் பெயர் பெற்ற; வாயிலார் - அடைந்து நன்மை பெறுதற்கு வாயில் - வழி - யாகவுள்ளவர் என்பது பொருள். தன்மை - நற்குணமமைந்த. தபோதனர் - தவத்தையே செல்வமாக உடையவர். வடசொற்றொடர். தபோதனர் - தோன்றினார் என்று இயைக்க. “தோன்றி்ற் புகழொடு தோன்றுகÓ (குறள்). |
|
|