பாடல் எண் :4088

நீராருஞ் சடையாரை நீடுமன வாலயத்துள்
ஆராத வன்பினா லர்ச்சனைசெய் தடியவர்பாற்
பேராத நெறிபெற்ற பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீராருந் திருநீடூர் முனையடுவார் திறமுரைப்பாம்.
10
(இ-ள்) நீராரும்.....அர்ச்சனை செய்து - கங்கையாறு நிறைந்த சடையினை உடைய சிவபெருமானைத் தமது நீடும் மனக்கோயிலினுள் தாபித்து மிக்க அன்பினாலே பூசித்து; அடியவர்பால்.....போற்றி - அடியவர்களுடனிருந்து நீங்காத வீட்டு நெறியினைப் பெற்ற பெருந்தகையாராகிய வாயிலார் நாயனாரைத் துதித்து அத்துணையாலே; சீராரும்....உரைப்பாம் - சிறப்புப் பொருந்திய திருநீடூரில் வாழ்ந்த முனையடுவார் நாயனாரது திறத்தினைச் சொல்வோம்.
(வி-ரை) சரித முடிபும் வருஞ்சரிதத் தோற்றுவாயுமாகிய கவிக்கூற்று.
மனவாலயத்து...அருச்சனைசெய்து - இந்நாயனார் செய்த அகப்பூசையின் சாரம்.
அடியவர்பால்....நெறி - முன்னே வீடுபெற்ற அடியவர் கூட்டத்தினின்று நீங்காது உடனிருக்கும் பேறு.
திரு நீடூர் முனையடுவார் - ஊரும் பெயரும் உரைத்துத் தோற்றுவாய் செய்தவாறு.
சரிதச் சுருக்கம்: வாயிலார் நாயனார் புராணம் :- தொண்டை நாட்டில் திரு மயிலாபுரிப்பதியில் வேளாளர் மரபில் வாயிலார் குடியில் தோன்றியவர் வாயிலார் நாயனார்; அவர் இறைவருக்கு மனமாகிய கோயிலும், அறிவாகிய விளக்கும், ஆனந்தமாகிய திருமஞ்சனமும், அன்பாகிய திருவமுதும் அமைத்து நாடோறும் வழுவாமே அகப்பூசை செய்வார். இவ்வாறு நெடுநாட் செய்திருந்து சிவனடி நிழலில் அடியாருடனே இருக்கப் பெற்றனர்.
கற்பனை:- (1) கடற்கரைப் பட்டினத்துக்குச் சிறப்பு கப்பல் வாணிபத் துறையில் விளங்குதலாம். (4081).
(2) சிவனுக்கு அகப்பூசைசெய்தல் சிறப்புத்தருவது.
(3) அகப்பூசை முடிவிற் புறப்பூசையும் செய்யத்தக்கது என்பதும் ஆகமவிதி.
(4) அகப்பூசையில் மறவாமை - ஞானம் -ஆனந்தம் - அன்பு முதலிய இவைகளே பூசைக்குரிய சாதனங்களாவன.
(5) அகப்பூசையை முறையாற் செய்வோர் சிவனடிக்கீழ் அடியரோடு நீங்காதிருப்பர்.
தலவிசேடம் - திருமயிலாபுரி ;- முன் உரைக்கப்பட்டது.