பாடல் எண் :4089

மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளி னனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெருகி வெள்ளமிடு மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ் செல்வ நீடூர் திருநீடூர்.
1
(இ-ள்) மாறு.....திருநாட்டு - பகைமையை வென்று உலகினைக் காக்கும் சோழர்களது காவிரிபாயும் திருநாட்டில்; நாறு.....தேன் - கமழ்கின்ற மணமுடைய சோலைகளின் மலரரும்புகள் விரிந்து பொழிகின்ற செழுந்தேன்; ஆறு.......கமழும் - ஆற்றின் வழியே பெருக்கெடுத்து அவ்வெள்ளத்தினால் சேறு செய்த வயலினுள் உழவர்கள் உழுகின்ற சேறும் நறு மணம் கமழ்கின்ற; செல்வ நீடுர் திருநீடூர் - செல்வம் நீடியுள்ள ஊராகும் திருநீடூர் - என்பது.
(வி-ரை) மண்காத்த - அரசாளும் எனத் தன்மை குறித்தது. மாறு - வேற்றரசரது பகை.
செல்வம் நீடுஊர் திருநீடூர் - திருநடூர் என்ற பதியின் பெயர்ப்பொருள் விரிக்குமாற்றால் நகரச்சிறப்பும் உடன் கூறியவாறு; முன்னர்த் “திருவாமூர் திருவாமூர்Ó (1277), “கமழ்சாறூர் கஞ்சாறூர்Ó (866) என்பன முதலியவை போலக் காண்க. செல்வம் - என்றது இங்கு நீரின் வளத்தாற் சோலைகளின் செழிப்பும் வயல்களின் செழிப்பும் பிறவுமாகிய உலகவளம் பற்றிக் கூறப்பட்டது.
ஆறுபெருகி - ஆறுபோலப் பெருகி; ஆற்று நீரினுள் சேர்ந்து பெருகி என்றலுமாம்; நனை - அரும்புகள். வாய்திறத்தல் - அலர்தல்; வாய்திறந்து பொழி செழுத்தேன் - தேன் பெய்து மூடிய குப்பிகளின் வாயினைத் திறந்து பொழிவது போல என்ற குறிப்பும் காண்க. நாறு விரை- விரைநாறும்.
அள்ளல் வயல் - சேற்றினையுடைய வயல்கள்; சேறு - சேறும் என்று இழிவு சிறப்பும்மை தொக்கது; எரு முதலிய பொருள்கள் தோய்ந்து அழுகுதலால் தீ நாற்றங் கமழவேண்டிய சேறும் அதற்கு மாறாகச் சோலைத் தேன்கலந்த நீர்பாய்வதனால் நறுவாசங் கமழ்கின்றது என்பதாம். செல்வம் நிறைந்த ஊரானது திருநீடூராம் என்க.
வெள்ளமிகும் - நீர்வெள்ளம் பாய்ந்து தங்கும்; மள்ளர் - உழவர்.