வார்ந்திழி குருதி சோர மலர்க்கருங் குழலுஞ் சோரச் சோர்ந்துவீழ்ந் தரற்றுந் தோகை மயிலெனத் துளங்கி மண்ணிற் சேர்ந்தயர்ந் துரிமைத் தேவி புலம்பிடச், செம்பொற் புற்றில் ஆர்ந்தபே ரொளியைக் கும்பிட் டரசரு மணைய வந்தார். | 7 | (இ-ள்) வார்ந்திழி .....சோர - வார்ந்ததனால் வழிகின்ற குருதி பெருகி வழியவும், மலர்சூடிய கரிய கூந்தலும் அவிழ்ந்து அலையவும்; சோர்ந்து...அயர்ந்து - சோர்வடைந்து விழுந்து அரற்றுகின்ற தோகையையுடைய மயில் போல நடுங்கித் தரையின் மேல் சேர்ந்து அயர்ந்து; அரிமைத் தேவி புலம்பிட - பட்டத்தரசி புலம்பியிட; செம்பொற்புற்றுள்...வந்தார் - செம்பொன்னியன்ற புற்றினிடமாக நிறைந்த பேரொளியாகிய பெருமானைக் கும்பிட்டு அரசரும் அங்கு அணையவந்தனர். (வி-ரை) வார்ந்து - வார்ந்ததனால் என்று காரணப்பொருள் தந்தது. இழிதல் - மிகப் பெருகி வடிதல்; குருதி சோர - இரத்தம் வீழ; குழல்சோர - கூந்தலைப்பற்றி வீழ்த்தியமையாலும் வருத்தத்தாற் புரண்டமையாலும் கூந்தல் விரிந்து அலைந்து என்க. தோகை மயிலென - நீண்ட குழல் அலைதல் தோகை புரள்வது போலுமென்பது; முன்னர்ச் சாயல் மாமயில் என்றது நிற்குநிலையில் உருவுவமமாய் நின்றது. இங்குப் புரளு நிலையில் வீழ்ந்தரற்றுந் தோகைமயில் என்றார். இவ்விரண்டற்கும் வேறுபாடு கண்டு கொள்க. முன்னர்ப் பெருமிதம்பட மாமயில் என்ற ஆசிரியர், இங்கு வாளா மயில் என்ற குறிப்பும் காண்க. துளங்குதல் - அசைதல். அசைவினால் “மயில்Ó என்றார். செம்பொற் புற்றில் ஆர்ந்த பேரொளி - புற்றிடங் கொண்ட பெருமான்; பேரொளி - இறைவர் பேர் ஒளி உருவினர் என்பது. அணைய - அவ்விடத்திற்சார; புற்றிடங்கொண்டாரைக் கும்பிட்டு மீளவும் வலம் வரும் அணிமையில் உள்ளது திரு அரநெறிப் பூமண்டபம். |
|
|