அரியவத் திருத்தொண் டாற்று மரசனா ரளவில் காலம் மருவிய வுரிமை தாங்கி மாலயற் கரியார் மன்னும் திருவருட் சிறப்பி னாலே செய்யசே வடியி னீழற் பெருகிய வுரிமை யாகும் பேரரு ளெய்தி னாரே. | 12 | (இ-ள்) அரிய........அரசனார் - அருமையாகிய அந்தத் திருத்தொண்டினை ஆற்றிய அரசர்; அளவில் காலம்......தாங்கி - பொருந்திய அளவில்லாத நீண்ட காலம் தமது உரிமையாகிய அரசாட்சியினையும் திருத்தொண்டினையும் தாங்கியிருந்து; மாலயற்கு...எய்தினாரே - விட்டுணுவுக்கும் பிரமனுக்கும் அரியவராகிய இறைவரது நிலைபெற்ற திருவருட் சிறப்பினாலே செம்மை தரும் சிவந்த திருவடியி னீழலின்கண் பெருகிய உரிமையாகும் பெரிய திருவருள் நிறைவினுள் பொருந்தப் பெற்றனர். (வி-ரை) அரிய அத்திருத் தொண்டு - செயற்கரும் செயலாகிய அத் திருத்தொண்டு; சிவாபராதத்தினை மாற்றிய நிலையும், தமது உரிமைத் தனித் தேவி என்றும் பாராது உலகப்பற்றினை அற எறிந்த நிலையும், அப்பற்றினை எறிந்து பற்றற்றான் பற்றிய பற்றினைப் பற்றிய நிலையும் திருத்தொண்டு எனப்பட்டன. உரிமை - உரிய அரசாட்சியும் திருத்தொண்டும்; இவை இவ்வுலகநிலை; பேல்வரும் உரிமையாகும் என்றது வீடுபேறாகிய சிவனுலக உரிமைநிலை; அந்நிலை, மற்றற வெறிந்த அன்பர்க்கே உரியது என்றவாறு. “அடிமல ரன்றி வேறொன் றறிவினிற் குறியா நீர்மைÓ என்று முன் (4096) உரைத்த இவரது தன்மை பார்க்க. செய்ய சேவடி - செய்ய - செம்மை தரும் பண்புடைய. சே - சிவந்த. பேரருள் - அருள் நிறைவாகிய தன்மை; பேரருளினிறைவில் ஒடுங்குதலே வீடுபேறு எனப்படும். |
|
|