பாடல் எண் :4118

எண்ணில்பெரும் பண்டார மீசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த வன்பினா லுறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியா னெடுங்காலந் திருநீற்றி னெறிதழைப்ப
மண்ணிலருள் புரிந்திறைவர் மலரடியி னிழல்சேர்ந்தார்.
10
(இ-ள்) எண்ணில்...மிகவூட்டி - அளவில்லாத பெரிய சேமநிதிகளை யெல்லாம் இறைவனடியார்கள் கவர்ந்து கொள்ளும்படி மனத்தின் உள்ளே நிறைந்த அன்பினாலே உற்ற கொள்கை நிகழ மிகவும் செய்வித்து; தண் அளியால்....அருள் புரிந்து - குளிர்ந்த அளியினால் நீண்டகாலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி உலகில் அருள்புரிந்து; இறைவர்.....சேர்ந்தார் - சிவபெருமானது திருவடி நீழலினை அடைந்தனர்.
(வி-ரை) எண்ணில்......ஊட்டி - பறைசாற்றுவித்த செயலினை முன் கூறினார்; அவ்வாறு பறைசாற்றக் கேட்டுச் சிவனடியார்கள் அனேகராய் வந்தனர்; பறை சாற்றியவாறே தமது பண்டாரங்களை யெல்லாம் திறந்துவிட்டு எல்லா நிதிகளையும் அவர்கள் கொள்ளைபெற முகந்து கொள்ளச் செய்தனர்; இவ்வாறு நிகழ்ந்தது உண்ணிறைந்த அன்பினாலாகியது என்பதாம்.
தண் அளியால்.......அருள் புரிந்து - அளி - கருணை; அருள் புரிந்து - உலகினர் மேல்வைத்த கருணையினாலே திருநீற்றின் நெறிதழைக்கும்படி அரசுசெய்து; திருநீற்றின் நெறி - சைவநெறி; இன் - இனிய; அரசாட்சியினை அருள் புரிந்து என்றது இறைவர் காத்தல்போல இவர் அரச நீதியினை உயிர்கள் உய்திபெறும் நோக்கத்துடன் இயற்றினர் என்பதாம்.