பாடல் எண் :4158

அருவாகி யுருவாகி யனைத்துமாய் நின்றபிரான்
மருவாருங் குழலுமையாண் மணவாளன் மகிழ்ந்தருளுந்
திருவாரூர்ப் பிறந்தார்க டிருத்தொண்டு தெரிந்துணர
ஒருவாயாற் சிறியேனா லுரைக்கலாந் தகைமையதோ?
1
(இ-ள்) அருவாகி...மணவாளன் - அருவமாயும், உருவமாயும், எல்லாப் பொருள்களுமாயும் நின்ற பெருமானும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மையாரது மணவாளனாரும் ஆகிய இறைவர்; மகிழ்ந்தருளும் திருவாரூர்ப் பிறந்தார்கள் - மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருவாரூரில் பிறந்தவர்களுடைய; திருத்தொண்டு....தகைமையதோ - திருத்தொண்டினைச் சிறியேனால் ஒருவாக்கினாலே தெரிந்து உணரும்படி உரைப்பது இயலும் தன்மையதாகுமா? ஆகாது. என்றபடி.
(வி-ரை) இப்பாட்டுப் பல பிரதிகளில் இல்லை.
அருவாதல் - உருவாதல் - இறைவரது பொதுவியல்பெனப்படும் தடத்த இலக்கணம்.
அனைத்துமாய்நின்ற - எல்லாமாய் நிற்கும்நிலை. ஆதல் - நிறைதல் என்ற பொருளில் வந்தது; எங்கும் நிறைந்த தன்மை; சர்வ வியாபகம் என்பர்; ஆய் - மாயையினால் எல்லாவற்றையும் ஆக்கும் தன்மை குறித்தது என்றலுமாம். நின்ற திருத்தாண்டகப் பொருளைப் பார்க்க. "அவையே தானே யாய்" - (போதம் - 2) "அருவமு முருவா ரூப மானது மன்றி நின்ற வுருவமு மூன்றுஞ் சொன்ன வொருவனுக் குள்ள வாமே." (சித்தர்).
உணர உரைத்தல் ஒருவாயால் ஆம் தகைமையதோ என்க. "ஒருநாவுக் குரை செய்ய வொண்ணாமை" (1266) என்ற கருத்து. ஓகாரம் எதிர்மறை குறித்தது.
திருத்தொண்டு - திருத்தொண்டுகள்; சாதியொருமை.
தேர்ந்துணர - தெரிந்துரைக்க - என்பனவும் பாடங்கள்.