பாடல் எண் :4165

ஆரணியத் துலர்ந்தகோ மயத்தைக் கைக்கொண்
டழகுறநுண் பொடியாக்கி யாவின் சுத்த
நீரணிவித் தத்திரமந் திரத்தி னாலே
நிசயமுறப் பிடித்தோம நெருப்பி லிட்டுச்
சீரணியும் படிவெந்து கொண்ட செல்வத்
திருநீறா மநுகற்பந் தில்லை மன்றுள்
வாரணியு முலையுமையாள் காண வாடு
மாணிக்கக் கூத்தர்மொழி வாய்மை யாலே.
3
(இ-ள்) தில்லை மன்றுள்.....வாய்மையாலே - தில்லையம்பலத்திலே வார் அணிந்த தனங்களையுடைய உமையம்மையார் காணும்படி திருக்கூத்தியற்றுகின்ற மாணிக்கக்கூத்தப் பெருமான் அருளிய சிவாகம விதிப்படி; ஆரணியத்து...பொடியாக்கி - காட்டில் உலர்ந்த பசுச்சாணத்தைக் கொண்டுவந்து சிறக்க நுண்ணிய பொடியாக்கி; ஆவின்....கொண்ட - பசுவினது சுத்தமாகிய கோசலத்தை விட்டுப் பிசைந்து அத்திரமந்திரத்தினாலே உண்டையாகப் பிடித்து ஓமத்தீயில் இட்டுச் சிறப்புற வெந்தபின் கைக்கொண்ட செல்வத்திருநீறு அநுகற்பமாம் - செல்வமாகிய திருநீறு அநுகற்பமெனப்படும்.
(வி-ரை) ஆரணியம் - பசுக்கள் மேயும் காடு; ஆவின் சுத்த நீர் - பசுவின் தூய மூத்திரம்; சுத்தம் - இயற்கை யடைமொழி; சுத்தம் செய்யும் நீர் என்க.
நீர் அணிவித்துப் - பிடித்து - என்க. நிசயம் - திரட்சி; உண்டை.
வெந்து கொண்ட - வெந்தபின் கைக்கைக்கொண்ட; வெந்து - வினையெச்சத்திரிபு; ஓம நெருப்பு - சிவ ஓமத்தீ.
செல்வம் - பெருஞ் செல்வம் ஆகிய முத்தித்திருவை விளைக்கும்.
மாணிக்கக்கூத்தர் - மாணிக்கம் போன்ற கூத்து இயற்றுபவர்; இரத்தின சபாபதி என்பர்.
மொழி - சிவாகமம்; ஆகுபெயர்.