பாடல் எண் :4166

அடவிபடு மங்கியினால் வெந்த நீறும்
ஆனிலைக ளனறொடக்க வெந்த நீறும்
இடவகைக ளெரிகொளுவ வெந்த நீறும்
இட்டிகைகள் சுட்டவெரி பட்ட நீறும்
உடனன்றி வெவ்வேறே யாவி னீரா
லுரைதிகழு மந்திரங்கொண் டுண்டை யாக்கி
மடமதனிற் பொலிந்திருந்த சிவாங்கி தன்னால்
வெந்ததுமற் றுபகற்ப மரபி னாகும்.
4
(இ-ள்) அடவி....நீறும் - பசுக்கள் மேயும் காடுகள் மரங்களின் உராய்தலினால் உண்டாகிய தீயினாலே வெந்த நீறும், பசுக்கள் தங்கும் இடங்கள் தீப்பற்றிக்கொள்ள வெந்த நீறும், இவ்வாறுள்ள பல இடங்கள் தீப்பற்ற வெந்த நீறும், செங்கற்களைச் சுட்ட தீயின் உண்டாகிய நீறும் ஆகிய இவற்றை; உடனன்றி....உண்டையாக்கி - ஒன்றுசேர்க்காமல் தனித்தனியே சிவாகமங்களில் விதித்த உரிய மந்திரங்களாலே பசு மூத்திரத்தினாலே பிசைந்து உண்டையாகச் செய்து; மடமதனில்...மரபினாகும் - திருமடங்களில் விளங்கும் சிவாக்கினியினால் விதித்தப்படி நீற்றப்பட்டது உபகற்ப மென்று சொல்லப்படும்.
(வி-ரை) படும்அங்கி - மூங்கி முதலியவற்றால் தோன்றும் தீ.
வெந்தநீறு - வேகுதலால் உண்டாகும் நீறு.
ஆனிலைகள் - பசுக்கள் இருக்கு மிடங்கள்; இவை பசுவின் சாணம் நிறைந்து கிடக்குமிடம்.
இட்டிகைகள் - செங்கற்கள். இட்டிகா - இட்டிகை; வடசொற்றிரிவு.
மடம் - முனிவர், மறையோர், பெரியோர்கள் வாழும் இடங்கள்; சிவாங்கி - இவர்கள் நாளும் வளர்க்கும் நியமமாகிய சிவவேள்வித் தீ.