பாடல் எண் :4174

“அடுப்பது சிவன்பா லன்பர்க் காம்பணி செய்தÓ லென்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி யவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி யையர் மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துட் கொண்டர் ரிருநிதி யின்மை யெண்ணார்.
4
(இ-ள்) அடுப்பது.......என்றே - சிவனுக்கும் அவனன்பர்க்கும் தமக்கு ஆகும் பணிகளைச் செய்தலே தக்கதாம் என்றே துணிந்து; கொடுப்பது.......கொடுத்து - கொடுப்பதற்காக எவ்வகையாலும் பொருளைத் தேடி அவ்வடியவர்கள் கொள்ளும்படி கொடுத்து; இருநிதியின்மை எண்ணார் - கோயில் அமைப்பதற்குப் பெருந்திரளான. செல்வம் தம்மிடம் இல்லாமையை எண்ணாதவராய்; கங்கை....மனத்துக் கொண்டார் - கங்கை வெள்ளம் நிரம்பிய சடையினையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளி யிருப்பதற்கு ஒரு கோயிலைக் கட்டும் செயலை மனத்துட் கருதினார்.
(வி-ரை) அடுப்பது - செய்யத்தக்கது; பணி - பணிகளின் தொகுதி.
சிவன்பாலன்பர்க்கு - சிவன்பாலும் அன்பர்க்கும் என்க. இவ்வாறன்றி சிவனிடத்தன்பு பூண்ட அடியவர்க்கு என்று ஒன்றாகக் கூட்டியுரைப்பினுமமையும்.
அடுப்பது - இதுவே மக்கட் பிறப்புக்கு அடுப்பது; ஏனைய வெல்லாம் அடாதன. 1832 - 2985 - பார்க்க.
என்றே - என்றே துணிந்து;
கொடுப்பது - அடியார்க்குக் கொடுக்கும் பொருளை; எவ்வகையும் - தம்மாலியன்ற எவ்வகையானும். அவர் - அன்பர்.
கங்கை மடு - கங்கை வெள்ளம்; மடு - ஆழமாகிய பெரிய நீர்நிலை; பொதிதல் - நிறைதல்.
கோயில் எடுப்பது - எடுத்தல் - அமைத்தல்; கட்டுதல்; எடுப்பதனை என்று இரண்டனுருபு விரிக்க.
இருநிதி - கோயில் அமைத்தற்கு வேண்டும் பெரும் செல்வம் 4179 - பார்க்க. இன்மை - தம்பால் இல்லாமையினை; இரண்டனுருபு விரிக்க.
எண்ணார் - எண்ணாதவராகி; முற்றெச்சம். எண்ணார் - மனத்துட்கொண்டார் - என்று கூட்டுக. கோயில் எடுக்கும் திருப்பணிக்கு இருநிதி முதலில் வேண்டப்படுவது என்ற உண்மையை ஆர்வ மிகுதியினால் நினையாது.