பாடல் எண் :4176

சாதனத் தோடு தச்சர் தம்மையு மனத்தாற் றேடி
நாதனுக் கால யஞ்செய் நலம்பெறு நன்னாட் கொண்டே
ஆதரித் தாக மத்தா லடிநிலை பாரித் தன்பாற்
காதலிற் கங்குற் போதுங் கண்படா தெடுக்க லுற்றார்.
6
(இ-ள்) சாதனத்தோடு.....தேடி - கோயில் கட்டுதற்குரிய சாதனங்களோடு தச்சர்களையும் மனத்தினாற் றேடிக்கொண்டு; நாதனுக்கு......நன்னாட் கொண்டே - இறைவருக்கும் கோயில் செய்தற்குரிய நன்மை பெறும் நல்ல நாளும் வேளையும் குறிக்கொண்டு; ஆதரித்து....பாரித்து - விரும்பி ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து; அன்பால்......எடுக்கலுற்றார் - அன்பின் நினைவினாலே ஆசை மிகுந்து இரவினும் உறங்காமல் கோயில் எடுக்கலாயினார்.
(வி-ரை) சாதனம் - கோயில் எடுப்பதற்கு வேண்டும் கல் - மண் சுண்ணம் - மரம் முதலாயின.
தம்மையும் - தேடி - முன் பாட்டிற் பொருள் தேடியது பற்றிக் கூறியவாறே என்று இறந்தது தழுவிய எச்சவும்மை.
தச்சர் - கல் - மண் - மரமிவற்றாற் கோயில் எடுக்கும் பணியாளர்; சிற்பிகள்.
நலம்பெறும் நன்னாட்கொண்டே - நன்மை பெறுவிக்கும் நன்னாளும் ஓரையும் நிச்சயித்து அந்நாளில் அவ்வேளையில் தொடங்கி;
ஆலயம் செய்நாள் - ஆலயப் பணிக்குரிய நாள்; செய் - கட்டுதற்குரிய.
நலம்பெறும் - நலத்தினைப் பெறுவிக்கும்; செய்யும்.
கொண்டே - ஏகாரம் தேற்றம்.
ஆகமத்தால் - கோயில் சிற்பமும் கணிதமும்பற்றிச் சிவாகமங்களிற் கூறும் விதியின்படி அளவு முதலியவை கண்டு; மேல் வரும் பாட்டுக்களில் உரைப்பனவும் சிவாகமங்களில் விதித்த கோயிற் சிற்ப அமைப்புக்கள்.
அடிநிலை - கடைகால்; அஸ்திவாரம் என்பர்; பாரித்தல் - பரப்புதல் - கால்கொள்ளுதல்.
அன்பால் - காதலில் - ஆலயம் எடுத்தல் அன்பினாலும், அதனைக் கங்குல் போதும் கண்படாதெடுத்தல் காதலாலும் ஆவன. காதல் - ஆசை; விரைவில் எடுத்து முடித்துக் காணும் ஆசை; முறுகிய அன்பினால் விளைவது ஆசை.
கங்குற்போதும் - உயிர்கள் எல்லாம் கண்படும் கங்குலிலும் என உம்மை சிறப்பு. பகற் போதில் ஓய்வின்றி எடுப்பதன்றிக் கங்குலிலும் என இறந்தது தழுவிய எச்சமுமாம்.