பாடல் எண் :4223

மூலத் தானத் தெழுந்தருளி யிருந்த முதல்வன் றனைவணங்கிச்
சாலக் கால மங்கிருந்து தம்பி ரான்றன் றிருவருளாற்
சீலத் தார்கள் பிரியாத திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தா ரமருந் தானம் பலவணங்கி,
9
(இ-ள்) மூலத்தானத்து.....வணங்கி - திருமூலத்தானத்தில் விளங்க வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி; சால.......இருந்து - மிகுந்த காலம் அங்கு இருந்து; தம்பிரான்றன்.......போய் - இறைவரது திருவருள் விடைபெற்றுச் சீல முடைய அடியவர்கள் நீங்காமல் வாழ்கின்ற திருவாரூரினின்றும் போய்; ஆலத்து.....வணங்கி - விடம் நிறைந்த கழுத்தினையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கி;
(வி-ரை) மூலத்தானத்து.......வணங்கி - “புகுந்து வணங்கினார்Ó (4222) என முன்பாட்டிற் கூறிய ஆசிரியர், அத்திருக்கோயிலினுள் திருமூலத்தானத்துள் புற்றிடங்கொண்ட இறைவர் திருமுன்பு வணங்கினர் என்று அந்த இடத்தினைக் கூறியவாறு. சீலத்தார்கள் - தேவாசிரியனில் உள்ள மெய்யடியார்கள்; முத்திபெறும் தகுதியார்களாய திருவாரூர்ப் பிறந்தார்கள் என்றலுமாம்.
முதல்வன் - புற்றிடங்கொண்ட பெருமான்.
சாலக்காலம் அங்கிருந்து - அங்கு - திருமுன்பு; வணங்கியபின் மிக்ககாலம் - வழிபாட்டுக் காலங்கள் முழுதும் அங்கிருந்து; இவ்வாறன்றிச் சாலக்காலம் - அத்திரு நகரில் பின்னர் தங்கிய பல நாட்கள் என்றலுமாம்; இப்பொருளில்அங்கு அத்திருநகரில் என்றுரைத்துக்கொள்க.
திருவருளால் - திருவருள் விடைபெற்று; திருவருளால் - போய் என்று கூட்டுக.
தானம்பல - பல பதிகளையும்; உம்மை தொக்கது; “தானங்கள்Ó (4221) “தானமெல்லாம் பணிந்துபோய்Ó (4215) என்றாங்கு உரைத்துக் கொள்க. இத் தானங்கள் - திருவாரூரினின்றும் சீகாழிக்குச் செல்லும் இடையில் வழியினும் மருங்கினும் உள்ளவை. ஆலத்து ஆர்ந்த -ஆலம் ஆர்ந்த; அத்து சாரியை.
வணங்கி - வணங்குதற்கு - வந்தார் என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.