பாடல் எண் :4227

தம்பி ரானைத் தோழமைகொண் டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பா லொருதூது செல்ல வேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான் பெருமா ளிணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார் ஞால மெல்லாங் குடிவாழ.
1
(இ-ள்) தம்பிராணை..... கொண்டருளி - தமது தலைவராகிய சிவபெருமானையே தமக்குத் தோழராக ஆக்கிக்கொண்டருளி; தமது...எம்பிரானை - (அவரையே) தமது பெரிய தோள்களைத் தழுவும் பூங்கொம்பர் போலும் அம்மையாரிடத்துத் தூதாகச் செல்லும்படி ஏவிக் கொண்டருளும் எமது பெருமானாராகிய வரை; சேரமான் பெருமான்...நம்பியாரூரை - சேரமான் பெருமான் நாயனாரது ஒப்பற்ற துணைவராகிய நம்பியாரூரரை; ஞால மெல்லாம் குடிவாழ - உலகத்தில் எல்லாவுயிர்களும் வாழ்வடையும் பொருட்டு; பயந்தார் - பெற்றனர் (சடையனார்).
(வி-ரை) தம்பிரானைத் தோழமை கொண்டருளி - தமக்கு மேலான தலைவரைத் தமக்கு ஒப்பாந்தன்மையிற் றோழராகக் கொள்ளுதல் தகாதென்பது குறிப்பு.
ஏவிக் கொண்டருளும் - இனி, அதனோடமையாது ஏவலையும் கொள்ளுதல் அதன் மேலும் தகாது என்பதாம்; இனி, அதன்மேலும் “அவ்வேவல்Ó தானும் கொம்பனார் பால் ஏவுதல் அதனினும் தகாது என்பதாம். இக்குறிப்புக்கள் படக்கூறியது நிந்தைத்துதியாகக்காட்டி அவரது இணையற்ற அன்பின் பெருமையையும் மேம்பாட்டையும் புலப்படுத்திய உட்குறிப்புப் பெறக் கூறியவாறாம்.
கொம்பனார் - பூங் கொம்புபோல்வார்; பரவையம்மையாரைக் குறித்தது. இனி, சங்கிலியார்பால் இறைவர் சென்றருளிய நிகழ்ச்சிகளும் ஒருவாற்றால் இதன் பாற் படுமென்க. “கொம்பருண்டேல்Ó (திருக்கோவை). எம்பிரான் - எமது பரமாசாரியர்.
சேரமான்....துணைவராம் - “சேரமான் றோழர்Ó என்னும் நாமமுடையார். 3812 - பார்க்க (கழறிற் - புரா. 66); இங்கு இவ்வாற்றாற்கூறி முடித்தது அடுத்து இருபெருமக்களும் ஒருசேரத் திருக்கயிலை செல்லும் சரிதக்குறிப்புக் காட்டுதற்கென்க. ஒரு தூது - ஒப்பற்றதூது.
ஞாலக் குடி எல்லாம் வாழ என்க. குடி - உயிர்வருக்கம், “பூத பரம்பரைபொலியÓ (1899); இவ்வாறன்றி ஞாலமெல்லாம் - உலகுயிர்கள் யாவும்; குடி - இறைவரருளிற்றிறம்பாது நிலைபெற்றுக் குடியாக; வாழ - வாழும்படி; என்றுரைப்பினுமமையும், ஞாலம் - இடவாகு பெயர்; குவலயத்தினலம் விளங்கும்படி.....குலம் விளங்கும்படி - என்ற வகைநூற் கருத்தை வடித்துக் காட்டியபடி.
பயந்தார் - பயத்தல் - மகனாகப் பெறுதல்; சடையனார் என்னும் எழுவாய் அவாய் நிலையான் வந்தது. நம்பிகளைப் பெற்றளித்ததே இவர்தம் வரலாறும் என்பது; “உலகுய்ய மகப்பெற்றார்Ó (1951) என்பது முதலியவையும், சிவபாத விருதயர் மகப்பேறு வேண்டித் தவம்புரிந்த வரலாறும் (1917) கருதுக; “உலக முய்யத் திருவவதாரஞ் செய்தார்Ó (149) என்று தொடக்கத்துக் கூறியதனையும் நினைவுகூர்க. பயந்தமை - என்பது வகைநூல்.
இவ்வொரு பாட்டினாம் தடுத்தாட் கொண்ட வரலாறு முதலாக வெள்ளானை மேற் கயிலை சேரும்வரை உள்ள, நம்பிகள் சரித முழுதும் குறிப்பிற் காட்டி, அப்பெருமை முழுதும் அவரைப் பெற்று உலகுக்கீந்த இவர்பாலதாம் என்று இவரது பெருமையும் காட்டிய கவிநயம் கண்டுகொள்க.
சரிதச்சுருக்கம் - சடையநாயனார் புராணம்; தம்பிரான் றோழராய் இறைவரைத் தூது கொண்டவரும் சேரமான் றோழருமாகிய நம்பியாரூரரை உலகுய்ய வரும் மகவாகப்பெற்றீந்த பெருமையுடையவர் சடையனாராகும். திருநாவலூரில் சிவமறையோர் குலத்தில் அவதரித்து அக்குலம் விளங்க வாழ்ந்தவர்.
கற்பனை ;- (1) இறைவரைத் தோழராகப் பெறுதலும் அவரைத் தூது கொள்ளுதலும் பேரன்பின் றிறத்தாலாவன.
(2) இறைவர் தமது தலைமையினை எண்ணாது அன்பருக் கெளிய தோழரும் தூதருமாவர்.
(3) ஆரூர் நம்பிகள் சேரமானாரது தோழராந் தன்மை இறைவராற் கூட்டப் பட்டதாதலின் இணையற்றது.
(4) தமக்கென்றன்றி உலகுய்யும்படி நன்மகப் பெறுதல் பெரியோர் திறம்.
தலவிசேடம். திருநாவலூர்;- முன் உரைக்கப்பட்டது; I - பக்கம் 258, பார்க்க. (பாட்டு - 224). சுக்கிரன் பூசித்த தலம்; சுவாமி - பக்தஜனேஸ்வரர்; அம்மை - மனோன்மணியம்மை எனவும் வழங்குவர்; நம்பியாரூரர் சந்நிதி கோயிலுள் வெளிச்சுற்றில் தென் கிழக்கில் உள்ளது; வரதராசப் பெருமாள் சந்நிதி கோயிலுக்குள் உள்ளும், அம்மை கோயிலின் முன்னும் உள்ளன; தலமரம் - நாவல்; மேற்புறம் கோமுகி தீர்த்தம் என்ற சிற்றோடையுண்டு; கோயிலுக்குத் தெற்கில் ? நாழிகை யளவில் கெடில நதி ஓடுகின்றது.