பாடல் எண் :3184

நம்பியா ரூரர்திரு வாரூரி னயந்துறைநாட்
செம்பொற்புற் றிடங்கொண்டு வீற்றிருந்த செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினொடுந் தாழ்ந்துணர்வி னாற்பருகி
இம்பருட னும்பர்களு மதிசயிப்ப வேத்தினார்.
30
(இ-ள்) நம்பி ஆரூரர்...நாள் - நம்பி ஆரூரர் திருவாரூரின்கண் விருப்பத்தோடும் தங்கி எழுந்தருளியிருந்த நாட்களிலே; செம்பொன்...தேனை - சிவந்த பொன் மயமாகிய புற்றினை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருந்த செழுந்தேனாகிய இறைவரை; தம் பெரிய....பருகி - தமது பெரிய விருப்பத்தினோடும் வணங்கி உணர்ச்சி உள்ளூர அருந்தி அநுபவித்து; இம்பருடன்....ஏத்தினார் - இம்மண்ணுலகத்தார்களோடு விண்ணுலகத்தார்களும் வியப்படையும்படி துதித்தருளியிருந்தனர்.
(வி-ரை) புற்றிடங்கொண்டு...தேனை - புற்றிடங்கொண்ட பெருமானை; வன் மீகநாதரை; தேனை - இறைவரைத் தேன் என்றது உவமையாகுபெயர்; தேன் இனித்து - உடலுக்கு நலம் செய்வது போன்று உணர்வுக்குள் ஆனந்தமாகி இனித்து உயிருக்கு இன்பஞ் செய்பவர். "அந்த விடைமருதி லானந்தத் தேனிருந்த, பொந்தை" நினைத்தொறுங்காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும், அனைத்தெலும் புண்ணெகவானந்தத் தேன் சொரியும் குனிப்புடையான்" (திருவா); "தேனே" (தேவா).
உணர்வினாற் பருகி - தேன் என்றதற்கேற்பப் பருகி என்றார். தேனை வாயினாற் பருகுதல் போல இறைவராகிய தேனை உணர்வினால் அநுபவித்தல் என்பதாம்; ஈண்டுப் பருகுதல் அநுபவித்தல்.
தாழ்ந்து - வணங்கி; தாழ்தல் - விரும்புதல் என்றலுமாம். படிதல் என்ற குறிப்பும்பட நின்றது; தேன் உள்ள இடத்தில் வண்டுகள் சென்று தாழ்ந்து மொய்த்து உண்ணுதல் போலே என்பது.
இம்பருட னும்பர்களும் - தேவர்கள் திருவாரூருக்கு வந்து தேவாசிரியனில் முறையிருந்தும் தியாகேசரை வணங்கியும் நலம்பெறத் திரண்டுள்ளாராதலின் இவ்வுலகத்தாரோடு அவர்களும் கூடிக் கண்டு அதிசயித்தனர். 3186 பார்க்க.
இம்பர் - இவ்வுலகம். உம்பர் - அவ்வுலகம். அஃதாவது மேல் - விண் - உலகம்.
ஏத்தினார் - ஏத்தியிருந்தருளினர்.