பாடல் எண் :3983

கோடாத நெறிவிளங்குங் குடிமரபி னரசளித்து
மாடாக மணிகண்டர் திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்திற் சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர்.
1
(இ-ள்) கோடாத......அரசளித்து - செங்கோல் நீதி பிறழாத நெறியில் விளங்கும் குறுநிலமன்னர் மரபில் வந்து அரசு செய்து; மாடாக....மனங்கொள்வார் - பெருஞ் செல்வமாகத் திருநீலகண்டருடைய திருநீற்றினையே மனத்திற் கொள்பவர்; தேடாத...காவலனார் - தேடிப்பெற வேண்டாது இயல்பிலே பெருவளங்களிற் சிறந்த திருமுனைப்பாடி நாட்டினை ஆளும் அரசர்; நரசிங்கமுனையரையர் - நரசிங்கமுனையரைய ரென்னும் பெயருடையவர்.
(வி-ரை) கோடாதநெறி - செங்கோல் நீதிநெறி பிறழாத நிலை.
முடிமரபு - பேரரசாகிய முடிமன்னரின் கீழிருந்து அரசுபுரியும் குறுநிலமன்னர் மரபு; முடிசூடுமுரிமையில்லாதோர்.
மாடு - பெருஞ்செல்வம்; திருநீறே - ஏகாரம் பிரிநிலை; திருநீறே செல்வமாவது; ஏனையவை செல்வமல்ல என்பது; மனங்கொள்ளுதல் - துணிதல், உறுதி கொள்ளுதல்; திருநீற்றின் முன் ஏனையவற்றைப் பொருளாக வைத்தெண்ணாத நிலையின் வரும் இவர் சரித வரலாறு குறிக்க.
தேடாத பெருவளத்தில்...நாடு - தேடாத - நாடியடைய வேண்டாத; பெருவளம் - தன் இயல்பில் நாடுதரும் வளங்கள். “ஏர் இனப்பண்ணை...எவ்வுலகும், வனப்பெண்ண வரும்பெண்ணை மாநதிபாய் வளம்பெருகும்Ó (1268) என்பதாதியாக இந்நாட்டு இயற்கை வளங்களை முன்னர் உரைத்தாராதலிற் தேடாத பெருவளம் என்ற மட்டில் இங்குக் கூறியமைந்தார். “நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல, நாட வளந்தரு நாடுÓ (குறள்) என்ற கருத்தினை இங்கு வைத்துக் காண்க. எமது மாதவச் சிவஞான முனிவர் “நாடிய பொருள் கைகூடும்Ó என்ற கம்பனிராமாயண முதற் செய்யுட் பகுதிக்கு ஆசங்கை யுரைத்த வழி இக்கருத்தினை எடுத்தாண்டமை காண்க. பிறநாடுகளிற் றேடி யடைதற்கரிய வளமுமாம்.
நாடாளுங் காவலனார் - இந்நரசிங்க முனையரையர் ஆளுடையர் நம்பிகள் காலத்திருந்தவர் என்பதும், நம்பிகளைத் தமது அன்பு மகனாராக எடுத்து வளர்த்தவர் என்பதும் கருதப்படும்; அதனைக் குறிக்க நாடாளும் என்றார்; அரையர் - அரசர்.
மனங்கொள்வார் - காவலனார் நரசிங்கமுனையரையர் என்று கூட்டுக. முனையதரையர் என்பது முனையரையர் என வந்தது. இது பற்றி முன் (467) உரைத்தவை பார்க்க. இதனால் நாட்டுச் சிறப்பும், அரசமரபுச் சிறப்பும், அரசர் பெயரும், பண்பும் கூறப்பட்டன.
மாடாத - குலமரபில் - என்பனவும் பாடங்கள். மாடாத - மாளாத.