அக்குலத்தின் செய்தவத்தா லவனிமிசை யவதரித்தார் மிக்கபெருஞ் செல்வத்து மீக்கூர விளங்கினார்; தக்கபுகழ்க் கலியனா ரெனுநாமந் தலைநின்றார்; முக்கணிறை வர்க்குரிமைத் திருத்தொண்டி னெறிமுயல்வார்; | 6 | (இ-ள்) அக்குலத்தின்......அவதரித்த அந்தக் குலம் செய்த முன்னைத் தவத்தின் பயனாக அதில் வந்து அவதரித்தார்; மிக்க....விளங்கினார் - மிகுந்த பெரியசைவத்தில் மேலோங்க விளங்கினார்; தக்க....தலை நின்றார் - தகுதியாகிய கலியனார் என்னும் பெயர் பூண்டு சிறந்து நின்றார்; முக்கண்.....முயல்வார் - மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு உரிமையாகிய திருத்தொண்டின் நெறியிலே ஒழுகுவாராகி; (வி-ரை) குலத்தின் செய்தவம் - குலத்தவர் செய்த முன்னைத் தவம் குலத்தின்மேல் லேற்றப்பட்டது; ஆகுபெயர். பெருஞ் செல்வத்து மீக்கூர - பெரிய செல்வம் மேலும் பெருகிவர. தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலைநின்றார் - கலியனார் என்ற திருநாமத்துக் கேற்றபடி தகுந்த புகழுடன் சிறந்தார். கலியர் - கலியிற் சிறந்தவர். கலி - வலிமை - வீரம்; புகழாவது - ஈகையால் வருவது. “ஈவார்மே னிற்கும் புகழ்Ó (குறள்); தலை நிற்றல் - சிறந்து விளங்குதல். முக்கண் இறைவர் - சிவபெருமான். உரிமைத் திருத்தொண்டு - தமது திருக்குலத்தோடு உரிமை பெற்று வருவதாகிய திருத்தொண்டின் தொழில். நெறி முயல்வார் - நெறியின் கண் முயல்வார்; முயல்வார் - தொழில் செய்வார் என்ற பொருளில் வந்தது. முயல்வார் -அறிந்து - விளைத்தார் - என மேற்பாட்டுடன் முடிக்க; அவதரித்து - என்பதும் பாடம். |
|
|