பாடல் எண் :4116

மெய்த்தவரைக் கண்டிருக்கும் வேன்மன்னர் வினவுதலும்
“அத்தனடி யாரையா னமுதுசெய்விப் பதுமுட்ட
இத்தகைமை செய்தேÓ னென் றியம்புதலு மிகவிரங்கிப்
பத்தரைவிட் “டிவரன்றோ பண்டார மெனக் Óகென்பார்,
8
(இ-ள்) மெய்த்தவரை.....வினவுதலும் - காவலாளர் பிடித்துவந்த அந்த மெய்யடியவரை அரச கொலுவீற் றிருக்கும் வேலேந்திய அரசர் கண்டு வினவுதலும்; அத்தன்.....இயம்புதலும் - இறைவனது அடியவர்களை யான் அமுது செய்விக்கும் தொழில் முட்டுப்பட்டமையாலே இவ்வாறு செய்தேன் என்று அவர் சொல்லுதலும்; மிக இரங்கி.....என்பார் - அதற்கு மிகவும் இரங்கி, அடியவரைக் காவலினின்று விடுவித்து, இவரன்றோ எனக்குப் பொக்கிசமாவார் என்று சொல்வாராகி,
(வி-ரை) மெய்த்தவர் - காவலாளர் பிடித்துக் கொணர்ந்த மெய்யடியார்; களவு செய்தேயும் சிவன் அடியாரை அமுது ஊட்டுதல் வேண்டுமென்ற உறுதிப்பாட்டினால் களவினால் தமக்கு நேரிடக்கூடிய அரச தண்டனையினையும் மனங்கொள்ளாதவராதலின் மெய்த்தவர் என்றனர். தேச சேவை என்ற பெயரால் அரச தண்டனையினைப் பொருட்படுத்தாதோரை இந்நாளில் பெருந்தியாகிகள் - தவசிகள் - என்று கூறும் நிலையினைக் கண்டு இதன் உயர்வு கண்டு கொள்க.
இருக்கும் வேன் மன்னர் - அரச கொலு வீற்றிருக்கும் வேலேந்திய மன்னர்1.
அத்தன்.....செய்தேன் என்று இயம்புதலும் - அடியவர்களின் வீரங் குறித்தது; எறிபத்த நாயனார் - செருத்துணையார் - இவர்கள் அரசர்களிடம் விடுத்த விடைகள் ஈண்டு வைத்து ஒப்புக்காணத்தக்கன. (4104)
மிக இரங்கி - அவ்வடியார் மனம் வருந்த வந்த நிலைக்கு மிக இரங்கினார்; அடியவரை அமுதூட்ட முட்டுப்பட்டபோது அவருக்கிருந்த மன நிலைக்கும், காவலாளார் பற்றியபோது வருந்திய நிலைக்கும் இரங்கினர் என்க.
விட்டு - காவலாளரது காவலின்றும் விடுவித்து.
இவரன்றோ எனக்குப் பண்டாரம் - இவ்வடியவரன்றோ எனது சேம வைப்பு. நெற்கூடு பண்டாரமாகாது; இவரே பண்டாரமாவார் என்பதாம்; என்னை? அது நெல்லைத் தன்னுள் கொண்டு வாளாவிருக்குமே யன்றிப் பயன்றராது; இவர் அவ்வாறன்றி அந்நெல்லைத் தம்முள் வைத்து அடியார்க்கமுதூட்டி அதனால் வரும் பயனை எனக்குத் தேடித்தருபவர் என்பது கருத்து. மேல் “படைத்த நிதிப் பயன் கொள்வார்Ó (4117) என்பது காண்க; ஓகாரம் உடன்பாட்டு வினா; உறுதி குறித்தது; “அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழிÓ (குறள்) என்ற கருத்தும், “தனக் குதவ வைக்குமிடம் அவ்வறம்Ó என்ற உரையும் காண்க. பண்டாரம் - நிதிச்சாலை; “பண்டாரத் தேயெனக் குப்பணித்தருள வேண்டும்Ó “பாதம்பணி வார்கள்பெறு பண்டம்Ó (நம்பி - தேவா) பண்டம் - பொருள்; அயலாரது பொருள் கவர்ந்து நல்வினை செய்யின் அதனால்வரும் அறம், பொருளுடையாரையும், தீவினை செய்யின் மறம் கவர்ந்தாரையும் சாரும் என்பது நீதி நூற் கருத்து, (ந - சிவ)
என்பார் - என்பாராகி; முற்றெச்சம்.
என்பார் - பயன் கொள்வார் - பண்ணுவித்தார் என்று, வரும் பாட்டுடன் முடிக்க.