பாடல் எண் :4189

மங்கையர்க்குத் தனியரசி, யெங்க டெய்வம்,
வளவர்திருக் குலக்கொழுந்து,வளைக்கை மானி,்
செங்கமலத் திருமடந்தை, கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை,
எங்கள்பிரான் சண்பையர்கோ னருளி னாலே்
யிருந்தமிழ்நா டுற்றவிடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் டிருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.
1
(இ-ள்) மங்கையர்க்குத் தனியரசி - மங்கையர்க்கெல்லாம் ஒப்பற்ற அரசியும்; எங்கள் தெய்வம் - எமது தெய்வமும்; வளவர் திருக்குலக்கொழுந்து - சோழர்களது திருக்குலத்தின் கொழுந்து போல்பவரும்; வளைக்கைமானி - வளையலையணிந்த மானியாரும்; செங்கமலத் திருமடந்தை - செங்கமலத்தில் வீற்றிருக்கும் திருமடத்தை போல்பவரும்; கன்னிநாடாள்......பாவை - பாண்டி நாட்டை ஆளும் பாண்டியர்களது குலத்துக்கு நேர்ந்த பழியினைத் தீர்த்த தெய்வத்தன்மையுடைய பாவைபோல்பவரும் (ஆகிய); எங்கள் பிரான்...பரப்பினாரை - பெரிய தமிழ் நாட்டிற்கு வந்த இடரை எங்களுடைய பெருமானாராகிய சீகாழித் தலைவரது திருவருளினாலே நீக்கித் தமது பொங்கும் ஒளியைத் தரும் திருநீற்றினைப் பரவச் செய்தவரை; போற்றுவார்...போற்றலாமே - போற்றுகின்றவர்களுடைய திருவடி எம்மாற் போற்றத் தக்கதாகும்.
(வி-ரை) முன், பாதங்கள் பரவலுற்றேன் - என்று தோற்றுவாய் (4188) செய்தாராதலின் அதற் கேற்ப இப்பாட்டினால் துதியை விரிக்கின்றார்; பாதங்கள் பரவுதலாவது அத்திருவடி பரவுவாரது திருவடியைப் போற்றுதலாம் என்பதாம்.
மங்கையர்க்கு......பாவை - இப்பண்புகள் ஆளுடைய பிள்ளையாரது “மங்கையர்க்கரசிÓ (ஆலவாய் - புறநீர்மை) என்ற திருப்பதிகப் பாட்டிற் கண்டவாறு விரித்து உரை கூறியபடி.
எங்கள் தெய்வம் - சைவவுலகுக்கும் சைவ நெறிக்கும் காவல் பூண்டு வளர்த்தலின் எங்கள் தெய்வம் - என்றார். எங்கள் என்றது சைவவுலகம் முழுவதையும் உளப்படுத்திக் கூறியது.
வளவர் திருக்குலக் கொழுந்து - “சென்னி வளர் மதியணிந்த சிலம்பணிசே வடியார்தம், மன்னியசை வத்துறையின் வழிவந்த குடிவளவர்" (1900) என்ற பெருமை குறித்து. இப்பெருமை பற்றியே ஆளுடைய பிள்ளையார் புராணத்தைத் தொடங்கிய குறிப்பும் காண்க; வளவர்கோன் பாவை - என்ற பதிகப் பகுதியை விரித்துரைத்தது. கொழுந்து போல்வரர் என்க.
மங்கையர்க்குத் தனியரசி - மங்கையர்க்கரசி என்று பிள்ளையார் பாராட்டியதைத் தனி - என்ற பண்பு தந்து மேலும் சிறப்பித்தவாறு; அரசிகள் பலரு மிருத்தல் கூடுமாதலின், தனி- (ஒப்பற்ற) என்பது பிறிதினியைபு நீக்கிய விசேடனம்.
வளைக்கை மானி - “வரிவளைக் கைமட மானிÓ என்பது பதிகம். மானி - பெருமையை யுடையவர்; மானம் - பெருமை.
செங்கமலத் திருமடந்தை - ஆயிரம் இதழ்க் கமலத்தில் வீற்றிருக்கும் ஞானாம்பிகை போல்பவர்; இலக்குமி போல்வார் என்பாருமுண்டு. “பங்கயச் செல்விÓ என்பதும் பதிகம்.
கன்னிநாடு ஆள் தென்னர் - கன்னிநாடு - பாண்டிநாடு. தென்னர் - பாண்டியர்; தெற்கில் உள்ள பாண்டி நாட்டை ஆள்பவர்.
தென்னர் குலப்பழி - கூன் பாண்டியர் சமணத்தைச் சார்ந்து சைவ நெறிக்குத் தீங்கு விளைக்கத் துணையாய் நின்ற சிவாபராதமாகிய பெரும்பழி; “தென்னவன் றானுமுன்செய் தீவினைப் பயத்தி னாலே, அந்நெறிச் சார்வு தன்னை யறமென நினைந்து நிற்ப......நன்னெறி திரிந்து மாறி நவைநெறி நடந்த தன்றேÓ (2499) என்றதும், ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் அதன்மேல் விரித்தனவும் காண்க. ஒரு குலத்துள் வந்த ஒருவர் பெரும்புகழ் விளைத்து வாழ்ந்தால் அப்புகழ் அக்குலமுழுதும் சார்தல் போலவே, ஒருவரது பழியும் அக்குல முழுதும் பற்றும் என்பது நீதியாதலின் தென்னர் குலப்பழி என்றார்.
தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வப் பாவை - குலப்பழியானது அக்குலத்துள் வந்த கற்பரசியாராலே தீரப்பெறுவதாம் என்பது. பாவை - பபவைபோல்வார்.
எங்கள்பிரான் - சைவ வுலகின் ஞானத்தலைவர். எங்கள் தெய்வம் என்றதற் கேற்ப இவ்வாறு கூறினார்.
எங்கள்....பரப்பினாரை - திருநீறு பரப்புதற்குக் காரணமாயிருந்தவரை; தங்கள்....திருநீறு - திருநீற்றினைச் சோழமரபுக்கு உரிமையாக்கிய திறம் காண்க.
தனித்திலதம் - பரவினாரை - புகழெம்மால் - என்பனவும் பாடங்கள்.