“சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல்கொண்டு வரவேணும்” -(அன்பாக) திருப்புகழ். சிறைபட்டிருந்த இந்திர குமாரனாகிய சயந்தனுடைய கனவில் அறுமுகனார் அருள்புரிந்தபோது கோழிக்கொடியுடன் சென்றார் என்ற அச்சரிதையை விரித்தோதும் முதல்வன் புராணத்துள் கண்டு தெளிக. “ஆரணம் பயில் ஞான புங்கவ சேவலங் கொடி யான பைங்கர ஆவினன்குடி வாழ்வுகொண்டருள் பெருமாளே.” -(மூலமந்திர) திருப்புகழ். முடிமேலே அஞ்சலி செய்வோர்க்ள் நேயக்கார :- இறைவனை வழிபாடு செய்யுங்கால் கரங்களை சிரங்களுக்கு மேல் பன்னிரண்டங்குலம் உயரக் கூப்பி வணங்க வேண்டும். அங்ஙனம் அன்புடன் அஞ்சலியஸ்தராக நின்று வழிபாடு செய்வோர்களுக்கு தேவர்களுங் காணவொண்ணாத தேவ தேவனால் திருமுருகேசன் நேயக்காரனாக எளிதில் இரங்கி இன்னருள் புரிகிறான். சிந்துரமின் மேவு போகக்கார :- உயிர்களுக்கு இன்பத்தை நல்குவதற்காக இறைவன் கிரியா சக்தியாகிய தேவகுஞ்சரியுடன் போக மூர்த்தியாக விளங்குகின்றனன். செஞ்சொலடியார்கள் வாரக்கார :- இனிய சொற்களையுடைய அடியார்களுக்கு அன்புடையவராக ஆண்டவன் விளங்குகின்றனர். “அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே.” -(குடிவாழ்க்கை) திருப்புகழ். |