பக்கம் எண் :


214திருப்புகழ் விரிவுரை

கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடையானுளன் யாமுளம்
எற்றுக்கோ நமனால் முனி வுண்பதே.
                    -அப்பர்.

மண்டோய்ந்தீ மென்கால் விண்டோய் வண்காயம் பொய்க் குடில் :-

இந்த உடம்பு மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினாலாகியது. பஞ்ச பூத பரிணாம சரீரம். ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் இது வந்துள்ளது. நிலை பேறில்லாதது. நீர்மேற் குமிழிக்கு நிகரானது.

    ஐந்துவிதமாகின்ற பூத பேதத்தினால்
       ஆகின்ற யாக்கை நீர்மேல்
   அமிழ்கின்ற குமிழி’
                        -தாயுமானவர்.

   `ககனமு மநிலமும் அனல்புனல் நிலமமை
       கள்ளப் புலால்            க்ருமிவீடு’
   -திருப்புகழ்.

பொய்யான உடம்பை மெய் என்று நம்பி, தவநெறி சேராது அவநெறி சேர்ந்து, காமதேனுவின் பாலைக் கமரில் கொட்டியதுபோல் தமது நேரத்தை வீணாக்கி மானுடர் வறிதே கெடுகின்றனர்; அந்தோ! பரிதாபம்.

   பொய் விளக்கப் புகுன்றீர் போது கழிக்கின்றீர்
       புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
   ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
       அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்
   கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில் விழுகின்ற
       களியரெனக் களிக்கின்றீர் கருத்திருந்துங் கருதீர்
   மெய்விளக்கும் எனது தந்தை வருகின்ற தருணம்
       மேவியதிங் கடைவீரேல் ஆவிபெறுவீரே.

என்று உலகினரை நோக்கி அருளால் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார்

   பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ எம்மிறைவர்
  மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே.
    -தாயுமானவர்.