பக்கம் எண் :


திருச்செந்தூர்217

கொங்கு ஆர் வண்டு ஆர் பண் பாடும் எனப் பதப்பிரிவு செய்க.

கொங்கு-வாசனை. அது தனியாகு பெயராக இங்கே மலரைக் குறிக்கின்றது. “கொங்கு தேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி” என இறைவன் தருமிக்குப் பாடித் தந்த பாடலாலும் அறிக.

ஆர்-நிறைதல்.

வண்டு-ஆர். இங்கே ஆர் என்ற சொல்லுக்கு அருமையென்பது பொருள்.

மலர்களில் நிறைந்த வண்டுகள் தேனையுண்ணும் பொருட்டு அரிய பண்களைப் பாடும். ஏன்? மலர் விரியும் பொருட்டு. நல்ல பண்ணைக் கேட்டவுடன் அரும்பு மலர்கின்றது. இசைக்கு அத்துணை வலிமையுள்ளது. இன்றும் பிச்சைக் கேட்க வருகின்ற யாசகர்கள் ஏதாவது ஒரு பாடலைப் பாடிக்கொண்டே வருவது கண்கூடு. பாடல் கேட்டவர் பரிசில் தருவர். அது போல் வண்டு பாடும் பண்ணுக்குப் பரிசிலாக மலர்த் தேன் தருகின்றது.

சீர்குன்றா மன்றல் கிரியோனே :-

மன்றல் கிரி என்பது வள்ளிமலை. வள்ளியைப் பெருமான் மணந்து கொண்டதனால் இப்பெயர்பெற்றது. வள்ளிமலை மிகுந்த மகிமை வாய்ந்தது. உலக மாதா இங்கு அவதரித்து வளர்ந்தனர்; வேதங்களும், முனிவரும் மூவருந்தேவருந் தேடிக் காணாத திருமுருகன் இம்மலையைத் தேடி வந்து; மறை கமழும் மலரடி நோவ இம் மலையில் நடந்தான் எனில் இம்மலையின் பெருமை நம்மால் இத்தன்மைத்து என்று நினைக்கவும், சொல்லவும் தரமோ?