நவகண்டங்கள்:- பரதகண்டம், குருகண்டம், கிம்புருடகண்டம், இளாவிருதகண்டம், அரிவருடகண்டம், கேதுமால கண்டம், இரமிய கண்டம், பத்திராசுவ கண்டம், இரணிய கண்டம் என்பனவாம்.
நிசதேவ:- முருகப்பெருமான் என்றும் ஒரு படித்தாக நித்தியமாக விளங்குபவர். செத்துப் பிறக்கின்ற பிறதெய்வங்களைப் போலல்லாது, பிறவாமலும், இறவாமலும், இருக்கும் தனிப்பெருந்தலைவர். “என்று மகலாத இளமைக்கார” -(சந்தனசவாது) திருப்புகழ் “பெம்மான் முருகன் பிறவா னிறவான்” -அநுபூதி (12) “என்றும் இளையா யழகியாய்” -நக்கீரர் “செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள மணவாள மணவாள செங்கீரை யாடி யருளே” -குமரகுருபரர் நலமான விஞ்சை கரு விளைகோவே:- சகல கலைகளும் முருகப்பெருமானிடத்திலிருந்தே தோன்றின. வேதாகமங் களும் அப்பெருமானுடைய திருமுகங்களினின்றும் தோன்றினவே; அதனால் அருணகிரியார் அப்பெருமானைப் பின்வருமாறு துதிக்கின்றார். “வேதாகம ஞானவினோத” -அநுபூதி (26) “கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த கல்வி கரைகண்ட புலவோனே” -(அல்லசடைந்த) திருப்புகழ் “சகல கலை முழுதும் வல பெருமாளே” -(அளகநிறை) திருப்புகழ் சவுந்தரிக:- ஆயிரங்கோடி மன்மதர்கள் ஒருங்கு கூடினும் எந்தை கந்தவேள் திருவடியழக்கு இணையாகாது. |