பெருமானுக்கு பஞ்சாக்கர வடிவமும் உளது என்பதனை: ஆடும்படி கேள்நல் லம்பலத்தா னையனே நாடுந் திருவடியி லேநகரம்-கூடும் மகர முதரம் வளர்தோள் கிகரம் பகருமுகம் வாமுடியப் பார். என்னும் உண்மை விளக்கத் திருவிருத்தத்தா லுணர்க. ஞானபண்டித ஸ்வாமி:- முருகப் பெருமான் ஞானமூர்த்தி என்பதும், ஞான தாதா என்பதும், ஞானாசாரியன் என்பதும், ஞான சொரூபன் என்பதும் அடியிற்கண்ட பிரமாணங்களால் அறிக. “குருக டாக்ஷக லாவே தாகம பரம வாக்கிய ஞானா சாரிய குறைவு தீர்த்தருள் ஸ்வாமி” -(பொருளின் மேற்) திருப்புகழ் “ஞானந்தா னுருவாகிய நாயக னியல்பை யானு நீயுமா யிசைத்து மென்றாலஃ தெளிதோ” -கந்தபுராணம் வெகு கோடி நாம சம்பு:- ஒரு நாமமுமில்லாத அப் பரமபதி, ஆன்மாக்களின் பொருட்டு பல ஆயிரந் திருநாமங்களைத் தாங்கியருள் புரிகின்றனர். “ஒரு நாம மோருருவ மொன்று மிலார்க் காயிரமாந் திருநாமம் படிநாந் தெள்ளேணங் கொட்டாமோ” -திருவாசகம் “பேராயிரம் பரவி வானோ ரேத்தும் பெம்மானை” -அப்பர் கிரிராஜ:- முருகக் கடவுள் குறிஞ்சி நிலக் கடவுளாதலால் மலைக்கு நாயகன் என்றார். “மலைக்கு நாயக” என்று திருக்கோண மலைத் திருப்புகழிலும் கூறியுள்ளார். |