சுவாமி என்ற திருநாமம் முருகவேளுக்கே உரியது. ஏனைய தேவர்களைச் சுவாமி என்பது உபசாரமேயாம். ஸ்வாமி என்ற வடமொழிப் பதத்தில் ஸ்வம் என்பதற்கு உடைமை (சொத்து) என்பது பொருள். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது உலகங்களையும் உயிர்களையும் உடைமையாக உடையவன் எவனோ அவன் ஸ்வாமி எனப்படுவான். “அமரகோசம்” என்ற வடமொழி நிகண்டில் முருகக்கடவுளின் திருப்பெயரைக் கூறும் கோவையில், “தேவசேனாபதிச் சூர: ஸ்வாமீ கஜமுகாநுஜ:” என்று வருமாறு காண்க. “ஸ்ர்வாண்டாதிபதௌ தஸ்மின் குஹே பரம பாவனே” என்ற வேத வசனத்தாலும் குகமூர்த்தி ஒருவரே மூவர்தேவாதிகட்கும் எல்லா உலகங்கட்கும் தனிப்பெருந் தலைவன் என்று நன்கு வலியுறுமாறு காண்க. ஆதலால் எல்லாவற்றையும், எல்லாவுயிர்களையும் உடைமையாகவுடைய முருகக்கடவுள் ஒருவரே ஸ்வாமி யெனப்படுவார். ஆதலால் அவர் எழுந்தருளியுள்ள மலை ஸ்வாமிமலை எனப்படுகின்றது. கருத்துரை சிவபுதல்வரே! வேலாயுதரே! சுவாமி மலையில் உறைபவரே! இருவினையொப்பு, மல பரிபாகமுற்று ஞான விழி திறக்கப் பெற்று, சிவயோகியாகி தேவரீருடன் அத்துவிதமுற்று மயில் மேலூர்ந்து இனிது உலவி வரவேணும். அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் டதனாலே சிவாயமெ னுநாமமொ ருகாலுநி னையாததி மிராகரனை வாவென் றருள்வாயே |