விரிவுரை இத்திருப்புகழில் முன்னுள்ள நான்கு அடிகளிலும் இருமனப் பெண்டிரின் மாயச் செயல்களைக் கூறி அம் மயக்க மறவேண்டும் என்று, இறைவன்பால் அடிகளார் வேண்டுகின்றனர். ஆடும் செகத்துக் கொருத்தர்:- கண்ணாடியில் காணும் நிழல் அசையும் பொருட்டுத் தான் அசைவது போல், அகில உலகங்களும் ஆடுதல் பொருட்டு இறைவன் இடையறாது ஆடுகின்றார். அனவரத ஆனந்தத் தாண்டவம் எனப்படும். சிவலிங்கம் அகர உகரமாகும். “எட்டிரண்டும் இதுவாம் இலிங்கமென எட்டிரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே”
-(கட்டிமுண்ட) திருப்புகழ். இந்த சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்ட ஐந்தெழுத்தே நடராஜ உருவம். எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள்-சிட்டன் சிவாயநம வென்னும் திருவெழுத்தஞ் சாலே அவாயமற நின்றாடு வான் -உண்மை விளக்கம் புளியைக் கண்டவர்க்கு நாவில் நீர் ஊறுமாப்போல், அம்பலவாணருடைய அருட்கூத்தைக் கண்டார்க்குக் கண்ணீர் பெருகும்; ஆணவ இருள் விலகும். ஆனந்த அமுதம் ஊற்றெடுக்கும். புளிக்கண் டவர்க்குப் புனலாறு மாபோல் களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குள் ஆனந்தத் தமுதூறும் உள்ளத்தே. -திருமந்திரம் அப்பரமபதியே அகில உலகங்கட்கும் தலைவர். பசுபதி; அவரே ஒருவர்; ஒப்பற்றவர். “உலகுயிர்க்கெல்லாம் பசுபதி ஒரு முதல்” என்று அரிச்சந்திர காவியம் பேசுகின்றது. நினைத்துத் துதித்த பத்தர்:- இறைவனை அநேகர் நினைக்கின்றார்கள். ஆனால் பொன்னையும் பொருளையும் நிலபுலங்களையும் பிறவற்றையும் நினைத்த வண்ணம் இறைவனையும் நினைக்கின்றார்கள். வேறு |