பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 351

 

பூமி தரிப்பர்:-

தீவினை செய்து செய்து மேலும் மேலும் இம்மண்ணுலகிலேயே பிறப்பவர்கள்.

பிறப்புடன் இருப்பர்:-

எடுத்த இப்பிறப்பினால் சிவகர்மம் புரிந்து பிறப்பை யொழிக்காமல் அவகன்மம் புரிந்து இந்த வுடம்புடனேயே இருப்பார்கள்.

வீடுகட்டி யலட்டுறு சமுசாரம் கெலிப்பர்:-

ஆசை மேலீட்டினால் வீடுகள் பல புதுக்கி, இச்சமுசார வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

மால் வலைப் பட்டுறு துட்டர்கள்:-

மால்-ஆசையினால் வரும் மயக்கம்; அந்த மயக்க வலையில் பட்டு உழல்கின்ற பொல்லாதவர்.

அழிப்பர்:-

நீதி நெறிகளை அழிவு செய்வார்கள்.

மாதவ முற்று நினைக்கிலர்:-

பெரிய தவநெறியை யடைந்து அதைச் சிறிதும் நினைக்காதவர்கள்.

கெடுப்பர் யாரையும்:-

எல்லோருக்கும் தீங்கு செய்து அவர்களைக் கெடுப்பார்கள்.

மித்திர குத்திரர்:-

மித்திரத்துரோகம் புரிபவர்; நம்பி நட்பு செய்த நண்பருக்குச் செய்யும் கெடுதல் கடவுளால் மன்னிக்க முடியாத பாவம்.

கொலைகாரர்:-

ஆடு மாடு மீன் கோழி முதலிய சிற்றுயிர்களைக் கொன்று தின்று திரிகின்றவர்கள்.

கிருத்தர்:-

தான் என்ற அகங்காரம் உடையவர்கள்.

கோளகர்:-

சதா பிறரைப் பற்றிக் கோள் சொல்லிக் குடிகெடுப்போர்கள்.