நம்முடைய வினை நீங்கும்பொருட்டு நாம் திருநீறு தரித்துக் கொள்ளுகின்றோம். இறைவன் ஏன் திருநீறு தரிக்கின்றார்? குழந்தைகட்குப் பிணியுண்டானால் தாய் பத்தியம் இருப்பது போல், தமது திருவடிகளை நினைக்கின்ற அடியார்களது வினைகள் விலகும் பொருட்டு இறைவன் திருநீறு தரிக்கின்றார். “நினைவொடு பணிபவர் வினைதுகள் பட எதிர் நினைந்து திருநீறணிந்த தொருபால்” -கொலு வகுப்பு. பகைவருடைய கணைகளினின்றுங் காக்கும் பொருட்டு வீரர்கள் கவசம் அணிவார்கள். அதுபோல் காமாதி பகைவருடைய துன்பம் நேராவண்ணம் அணியும் கவசம் திருநீறு. அதனால் அது ரக்ஷை எனப் பேர்பெறும். “கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை” -திருமந்திரம். “சைவ மரபில் பிறந்து திருநீறு அணியாத பாவிகள் நெற்றியைச் சுடு”, “திக் பஸ்ம ரஹிதம் பாலம்” என்று பஸ்ம ஜாபால உபநிடதங் கூறுகின்றது. வெண்மையை உலகம் விரும்பும், வெள்ளையாக உடுப்பது சிறப்பு. “வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை” என்பது பழமொழி. சூதுவாதில்லாதவர்களைப் பார்த்து, “வெள்ளையுள்ளம்” என்று கூறுவர். வெண்மையான துணி, வெண்மையான கடிதம் இவைகளை நெருப்பில் இட்டால், கருமையாகிவிடும். வெண்மையான பொருள்கள் யாவற்றையும் கருமையாக்கும் அக்கினி கருமையான சாணத்தை மட்டும் வெண்மையாக்கி விடுகின்றது. ஆகவே நமது அஞ்ஞானமான கருமையை ஞானமாகச் செய்வது திருநீறு. சாணத்தால் நீற்ற சாம்பல் அவரைச் செடியில் வரும் கருங் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலுடையது. விதிப்படி சாணத்தால் நீற்ற வெண்ணீறு நம் சரீரத்தில் உள்ள நச்சுக் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உடையது என உணர்க. “அருள் செய்நீறிடார் அமுதுனக்கிடினும் அம்மலத்தினை அருந்துதல் ஒழிக” -திருஅருட்பா. சைவ சமயமாம் நமது தெய்வச் சமயத்தின் சின்னங்கள் மூன்று. திருநீறு, உரத்திராக்கம், திருவைந்தெழுத்து. நெற்றியில் |