“மெய்வாய் விழி நாசி யொடுஞ் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே” -கந்தரநுபூதி. உபாயம்:- ஆசையினால் பல சூழ்ச்சிகள் செய்ய நேரும். பல நூலின்:- கல்வியும் கவலை தருவதுதான். அதனால்தான் மாணிக்க வாசகர், “கல்வி யென்னும் பல்கடல் பிழைத்தும்” “கற்பனவும் இனிமையும்” என்று அருளிச் செய்தார். அள்ளல் கடவாது:- அள்ளல்-சேறு. இந்தத் துன்பமாகிய சேற்றைக் கடவாது ஆன்மாக்கள் அதில் வீழ்ந்து மாய்கின்றன. “பிரபஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா” -கந்தரலங்காரம். உள்ளமுமில் வாழ்வைக் கருதாசைப் பொய்யுமகலாத மெய்:- மெய்-உடம்பு. இந்த உடம்பு மனம் ஆசை முதலியவற்றுக்கு இடமாய் நிற்பது. உய்யும் வகை யோகத்தணுகாதே:- உயிர்க்கும் உய்யும் நெறி யோக நெறியாகும். அருணகிரியார் சிவராஜ யோகத்தைப் பற்றி திருப்புகழில் பலமுறை விளக்கஞ் செய்கின்றார். புல்லறிவு பேசி அல்லல்படுவேனை:- புல்லறிவினால் வீண் வார்த்தைகளைச் சதா பேசிப் பலர் அல்லல்படுகின்றார்கள். பயனில் சொல் பாராட்டுவானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். -திருக்குறள். |