பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 377

 

      நில்லார் அறத்தை நினையா நின்னாமம் நினைவில் சற்றும்
      இல்லா இருந்தென் இறந்தென் புகல்கச்சி யேகம்பனே.
                                                  -பட்டினத்தார்.

கையர்க் குபாயமென்று பொய்யர்க்குமே யயர்ந்து:-

வஞ்சகருடனும், தந்திரமே புரியும் பொய்யருடனும் பழகி வாடுகின்றார்கள்.

தீயவர் நட்பு தீயினும் தீயது. தீ உடம்பை மட்டும் சுடும். தீயவர் நட்பு உள்ளம் உணர்வு உயிர் முதலிய எல்லாவற்றையும் சுடும்.

உள்ளப் பெறாகநின்று:-

“இப்படி யலைந்த அடியேன் உள்ளத்தில் முருகா! நீ பெறும் பேறாக நின்று அருள் செய்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார்.

  “என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா” -திருவாசகம்.

உள்ளத்தின் மாய்வ தொன்றை மொழியாயோ? :-

மனம் கொண்ட இடமே சுகாரம்பமாகும். மனோலயம் அடைந்த இடத்தில் ஆனந்த ஊற்று சுரக்கும்.

      போக்கும் வரவும் இரவுபகலும் புறம்பும் உள்ளும்
       வாக்கும் வடிவு முடிவும் இல்லாதொன்று வந்துவந்து
       தாக்கும் மனோலயந் தானேவரும் எனைத்தன் வசத்தே
      ஆக்கும் அறுமுகவா! கொல்லாணாதிந்தா ஆனந்தமே.
                                                      -கந்தரலங்காரம்.

      சினமிறக்கக் கற்றாலும் சித்தி யெல்லாம் பெற்றாலும்
      மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே. -தாயுமானார்.

ஐயப்படாத ஐந்து பொய்யற்ற சோலை:-

கற்பகம் என்ற தெய்வத்தரு நினைத்ததைத் தரும் இயல்புடையது. அதில் சந்தேகம் இல்லை பொய்யுமில்லை.

சந்தனம், அரி சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் என்ற ஐந்து தருக்கள்.

அல்லைப்பொறா முழங்கு கொல்லுக்ர சேவல்:-

அல்-இரவு. இரவு சேவலுக்கு வெறுப்பைத்தரும். அதனால் விடியற்காலையில் மகிழ்ந்து கொக்கறுகோ என்று கூவுகின்றது. ஞானவொளியைக் கண்டு களிப்பது. அது நாத தத்துவம் என வுணர்க.

சேவல் கூவுவதால் ஆணவ இருள் நீங்கும்.