ஒரு ஞான எல்லைக்கும்:- ஒப்பற்ற சிவஞானம் ஒன்றே முடிவாக நின்று ஆன்மாக்களுக்கு இன்ப எல்லையாக இருந்து அருள் செய்ய வல்லது. ஆரணங்கள் சொல்லித் தொழாவணங்கு மெல்லைக்கும் வாவி:- வாவுதல்-தாண்டுதல். பெரியோர்கள் வேத மந்திரங்களைக் கூறி இறிஅவனைத் தொழுது வணங்குவார்கள். தொழுவது-கரங்களால். வணங்குவது-தலையால். “கைகாள் கூப்பித் தொழீர்” “தலையே நீ வணங்காய்” -அப்பர். “வணங்கத் தலை வைத்து” -மாணிக்கவாசகர். “வந்தெதிரே தொழுதானை வணங்கினான்” -கம்பர். இந்த அருள் நெறியைத் தாண்டிச் செல்வர் கீழ்மக்கள். “தவநெறி தனை விடு தாண்டு காலியை” -(தரையினில்) திருப்புகழ். அருள்நாமம் எள்ளற்கு மாலயர்ந்து:- கீழோர் இறைவனுடைய அருள் நாமத்தை இகழ்ந்து இடர்ப்படுவர். இணங்கை யொழிவேனோ:- இத்தகைய மூடர்களது சேர்க்கையை அறவே ஒழிக்க வேண்டும். “கண்ணாவா ரேனுமுனைக் கைத்தொழா ராயின் அந்த மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே” -தாயுமானார். அல்லைக்கவானை தந்த வல்லிக்கு:- அல்லைக்கு அ ஆனை தந்த வள்ளி. இரவில் சென்று, விநாயகர் யானை வடிவாக வந்து அச்சுறுத்த அபயம் புகுந்த வள்ளியை முருகவேள் மாலையிட்டு மனம் புரிந்தருளினார். |