தன்பெருமை யெண்ணாமை தற்போதமே யிழத்தல் மின்பெருமை யாம்சகத்தை வேண்டாமை-தன்பால் உடலைத் தினம்பழித்தல் ஓங்குசிவத் தொன்றல் நடலைப் பிறப்பொழியு நாள். -சிவபோகசாரம். தெள்ளத்தி சேர்ப்ப:- அத்தி-தெய்வயானை. “முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை” -திருப்புகழ். அத்தம்-கை. அத்தத்தையுடையது யானை. யானையால் வளர்க்கப்பட்டவள் தெய்வயானை. தெளிந்த அறிவுள்ள தேவகுஞ்சரியின் கணவர். வெள்ளத்திமல்:- வெள்ளை யானையையுடைய இந்திரன். வெள்ளுத்தி மால்:- உந்தி-கடல். சந்தத்துக்காக இது உத்தியென வந்தது. வெண்மையான பாற்கடலில் துயின்ற திருமால். சிள்ளிட்ட காட்டில்:- சிள் வண்டுகள் நிறைந்த காடு. கிரார்:- கிராதகர்-வேடர். இடைக் குறையாகக் கிரார் என வந்தது. புள்ளத்த மார்க்கம்:- அத்தம்-காடு. வேடர்கள் கொல்லுகின்ற பட்சிகளையுடைய காட்டு வழியில் வள்ளியின் பொருட்டு முருகவேள் சென்றருளினார். வள்ளிச் சன்மார்க்கம்:- வள்ளி அநுட்டித்த உண்மை நெறி. வள்ளிநாயகி முருகவேளை நினைத்து தன்னை மறந்து தலைவன் தாள்தலைப்பட்டு நின்றார். அந்த நிலை வந்தபோது இறைவன் தானே வந்து அருள் புரிகின்றார். இதுவே இறைவனை யடையும் நெறி. இந்த இரகசிய நெறியை முருகவேள் முக்கட் பிரானுக்கு உபதேசித்தருளினார் என உணர்க. |