| ஐயமுதுகிண்ட:- ஐயம்-சந்தேகம். இது என்ற சொல் உது என வந்தது. தலைவிக்குத் தலைவன் தன்னை விரும்புவானோ? விரும்ப மாட்டானோ என்ற ஐயம் ஏற்பட்டு வருந்துவள். சொல்லும்:- ஊர் மகளிர் தலைவனை நினைந்து வருந்துகின்ற தலைவியைப் பரிகசித்து வசை மொழி கூறுவர். அரவிந்தவல்லி:- தாமரையில் வாழும் இலக்குமி போன்றவள். தனி நின்று:- முருகா! என் புதல்வி தனிமையில் கிடந்து தவிக்கின்றாள். தொல்லை வினையென்று முனியாதே:- “முன் செய்த பழ வினையால் இத்துயர் எனக்கு நேர்ந்ததேயென்று கூறி என் மகள் தன்னைத்தானே வெறுத்துக் கொள்ளுகின்றாள். அவ்வாறு வெறுத்துக் கொள்ளாத வண்ணம் நீ அருள் செய்” என்று தாய் முருகனை வேண்டுகின்றாள். துய்யவரி வண்டு செய்யுமது வுண்டு துள்ளிய கடம்பு:- முருகனுடைய மாலை கடம்பு. அதில் தூய ரேகைகளுடன் கூடிய வண்டுகள் சிவந்த தேனைக் குடித்து, மதுமயக்கத்தால் துள்ளிக் குதிக்கின்றன. “முருகா! இப்புதல்விக்கு உன் கடப்ப மலர் மாலையைத் தந்தருளுவாயாக” கல்லசலமங்கை யெல்லையில் விரிந்த கல்வி கரைகண்ட புலவோனே:- ஒரு காலத்தில் தேவர்கள், முனிவர்கள் முதலியோர் குழுமினார்கள். அக்குழுவில் யார் முதன்மைப் புலவர்? அத்தகைய முதன்மைப் புலவர்க்கு வித்வதாம்பூலம் தரவேண்டும் என்ற ஆராய்ச்சி நிகழ்ந்தது. கலைமகளின் அம்சமான ஒளவையாரே சிறந்த புலவர் அவருக்குத்தான் தாம்பூலம் தரவேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் ஒளவையாரிடஞ் சென்று, “அம்மே! தாங்கள் புலவர் சிகாமணி. இந்த வித்வாதாம்பூலம் உமக்கே உரியது . பெற்றுக் கொள்ளும்” என்று நீட்டினார்கள். |