போகும் அந்த நாளில் தேவரீர் உமது மேலான திருவடியைத் தந்தருளும். விரிவுரை இத்திருப்புகழில் மாதர்களின் கண் முதலிய உறுப்புக்களின் வர்ணனை நன்கு கூறப்பட்டது. கொலை கொண்ட போர்விழி கோலோ வாளோ:- பொது மகளிரது கண்கள் கலகஞ் செய்து கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போர் செய்ய வல்லது. கண்களுக்கு உவமையாக அம்பு, வாள், வேல், சேல், மான் முதலியவற்றைக் கூறுவர். பஞ்சபாதகம்:- கொலை, பொய், களவு, கள், குருநிந்தை. உயிர் கொண்டுபோய் விடுநாள் நீ மீ தாள் அருள்வாயே:- “இயம தூதர்கள் வந்து உயிரைக் கொண்டு போகும் அந்நாளில் முருகா! உமது பதமலரைத் தந்தருள்” என்று அப்போதைக்கு இப்போது விண்ணப்பம் புரிகின்றார். அவிர்கின்ற சொதிய........வேல்:- எம்பிரான் திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதம் நூறுகோடி சூரிய ஒளியை யுடையது. ‘உலாவுதயபாநு சதகோடி யுருவானவொ ளிவாகு மயில்வேல்’ -(அவாமருவி) திருப்புகழ். அருமந்த ரூபக:- முருகன் என்றாலே அழகு என்று பொருள். முருகன் திருவுருவின் அழகு எழுதரிய வடிவு. நேரே பார்த்த சூரபன்மன் கூறுகின்றான். ஆயிரங் கோடிகாமர் அழகெலாந் திரண்டொன் றாகி மேயின எனினுஞ் செவ்வேள் விமலாமாஞ் சரணந் தன்னில் தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடில் இனைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார். -கந்தபுராணம். முருகனுடைய திருவடியின் ஒரு மூலையில் உள்ள அழகுக்கு ஆயிரங்கோடி மன்மதர்களின் அழகு இணையாகாது. வேறோர் வடிவாகி:- முருகன் தன் சுய வடிவை மாற்றி, வேட வடிவாகச் சென்றார் வள்ளியிடம். |