அழைக்கின்றனர். “நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு” என்று அப்பமூர்த்திகள் நெஞ்சை யழைக்குந் திறனையும் இதனோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்க. இந்தா மயில்வாகனர் சீட்டிது:- புகைவண்டியில் ஏறுபவனும், நாடகத்திற்குச் செல்பவனும் நுழைவுச்சீட்டு எடுத்தாலன்றி அநுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதலினால் கந்தவுலகிற்குச் செல்லும் “மயில்வாகனர் சீட்டு” ஒன்று உளது. அதனைப் “பெற்றுக்கொள்” என்கின்ற உலகியல் உன்னுந்தோறும் உவமை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. மைந்தா குமரா வெனுமார்ப்புய மறவாதே:- ஒருவன் உய்ய வேண்டுமானால் முருகா! மூவர் முதல்வா! குமாரா! குன்றெறி வேலா! மயிலா! சிவமைந்தா! என்று எக்காலமும் ஓங்கி உரைத்துக்கொண்டே இருக்கவேண்டும். “விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன்” -மணிவாசகம். சிராப்பள்ளி என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே:- “திருச்சிராப்பள்ளி”, “திருச்சிராப்பள்ளி” என்று எப்போதும் சொல்பவர்கள் உள்ளத்தைக் கோயிலாகக் கொண்ட, வடிவேற் பெருமான் வள்ளியம்மையாருடன் எழுந்தருளுவர். அரிச்சிராப்பகல் ஐவரா லாட்டுண்டு சுரிச்சிராது நெஞ்சேயொன்று சொல்லக்கேள் திரிச்சிராப்பள்ளி யென்னலுந் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே. -அப்பர். கருத்துரை ஓ மனமே! நமது உடல் நிலையற்றது. அநேக பிறப்பெடுத்து நாம் இனி பிறவாநெறி பெறவேண்டும். முருகன் கைச்சீட்டும் திருநீறும் இந்தா! “அசுரகுலகாலா! சிவமைந்தா! சிராமலைச் செல்வா! குமரா” என்னும் ஆர்ப்புடன் கூறி உய்வாய். அரிவையர் நெஞ்சுரு காப்புணர் தருவிர கங்களி னாற்பெரி தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் முலைமேல்வீழ்ந் |