பக்கம் எண் :


484 திருப்புகழ் விரிவுரை

 

படுத்தி, வாயில் மணலைச் சொரிவித்து, நெருப்பினுள் சூடேற்றும்படியாக விட்டு, அந்தவுயிரைச் செக்கில் இட்டு அரைத்து, வரிசையாயுள்ள பற்களை உதிரும்படி அடித்து, எரிகின்ற செம்பாலாகிய பதுமையைத் தழுவச் செய்து, முட்களில் கட்டி இழுத்து வாயுங் கண்ணும் கலங்கி அசையும்படி அடித்து ‘என் உடம்பிலுள்ள இறைச்சியை யறுத்து என் வாயில் இட்டு உண்பித்து எலும்பை முரித்து, நொறுக்கி நசுக்கி வருந்தும்படி விலங்கு பூட்டித் துன்புறுத்தும் இயம தண்டனையின் துயரத்தை தீர்த்தருளுவீராக.

விரிவுரை

புவனத்தொரு பொற்றொடி சிற்றுதரக் கருவிற் பவமுற்று:-

பொற்றொடி-பொன்னாலாகிய வளையலை யணிந்தவள், அன்மொழித்தொகை.

ஒரு பெண்ணின் சிறிய கருப்பையில் பத்து மாதங்கள் புழுக்கமும் நெருக்கமும் இருளும் நிறைந்த இடத்தில் துன்புற்று இருந்து இந்த ஆன்மா பிறக்கின்றது, பிறவித் துயர் மிகக் கொடியது.

விதிப்படியில் புணர்துக்க சுகப் பயில்வுற்று:-

முன் செய்த நல்வினை தீவினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களை ஆன்மா நுகர்கின்றது. இறைவன் கூறிய நியாயத் தீர்ப்பு விதியாக வந்து ஆட்சி புரிகின்றது.

“விதிகாணும் உடம்பை விடாவினையேன்”                         -கந்தரநுபூதி.

மரித்திடில்:-

உடம்பு முகந்து கொண்ட வினை முடிந்தவுடன் உயிர் உடம்பை விட்டுப் பிரிந்துவிடும்.

உடம்பு-அகல், வினைப்போகம்-நெய், வாழ்நாள்-திரி, எரிகின்ற சுடர்-உயிர்.

நெய்யற்றவுடன் வாழ்நாளாகிய திரி எரிந்து உயிராகிய விளக்கு அணைந்துவிடுகின்றது.

       புண்ணிய நறுநெயிற் பொருவில் காலமாம்
       திண்ணிய திரியினில் விதியென் தீயினில்
       எண்ணிய விளக்கவை இரண்டு எஞ்சினால்
       அண்ணலே அவிவதற் கைய மாவதோ.
                                                        -கம்பராமயணம்.