பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 485

 

ஆவி புரியிட்டகமிட்டு:-

தூல உடம்பில் உறைந்த உயிரைச் சூக்கும உடம்பில் இட்டு இயம தூதர் கொண்டு போவார்கள். அது புரியட்டக சரீரம் எனப்படும்.

ஐம்பெரும் பூதங்கட்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற தன் மாத்திரைகள் 5. மனம், புத்தி, அகங்காரம் 3 ஆக 8 தத்துவங்களுடன் கூடியது புரியட்டகம். இதை சூக்குமதேகம் என்றுங் கூறுவர்.

“ஆசைசேர் மனாதிதம்மாத்திரை புரியட்டகந்தான்”
                                              -சிவஞானசித்தியார் (153)

அதுகட்டி:-

சூக்குமதேகத்தைப் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு போவார்கள் இயம தூதுவர்.

இறுக்கு அடி குத்தென அச்சம் விளைத்து:-

இயமதூதர்கள் “நன்றாக இறுக்கு, அடி, குத்து,” என்று கூறி மிக்க அச்சத்தை உண்டாக்குவர்கள்.

அலறப் புரள்வித்து:-

ஓ ஓ என்று அலறி அழும்படி தரையில் புரளவிட்டு வருத்துவர்.

மணற் சொரிவித்து:-

ஊரவர் உடைமைகளையும், கோயில் உடைமைகளையும் உண்ட வாயில் கொதிக்கின்ற மணலை அள்ளிக்கொட்டித் துன்புறுத்துவர்.

அனலூடே தவனப்பட விட்டு:-

சூலத்தில் குத்தி தீயில் காய்ச்சி, தாகம் எடுக்க இடர்ப்படுத்துவர்.

உயிர் செக்கிலரைத்து:-

ஆடு கோழிகளை அறுத்து அந்த இறைச்சியை உரலில் இட்டு ஆட்டிப் பக்குவஞ் செய்து உண்டவர்களை, செக்கில் இட்டு ஆட்டி அல்லற்படுத்துவர்.

       “நமன்தமர் செக்கிலிடும்போது
           அஞ்சல் என்பாய்”                            -அப்பர்.