கருத்ததனிற் பரவப்படு..............குருநாதர்:- இத்தகைய பரமஞானிகள் தம் கருத்தில வைத்துத் துதிக்கும் பொருள் முருகவேள். சிவனுத்தமன்:- சிவபெருமான் ஒருவரே உத்தம தெய்வம். சிவன் உத்தமன், பார்வதி உத்தமி. “மத்தள வயிறனை இத்தமி புதல்வனை” -(கைத்தல) திருப்புகழ். நித்தன்:- சிவபிரான் ஒருவரே அழிவில்லாதவர். ஏனைய திரிமூர்த்திகளும், தத்தம் தொழிலில் திரிமூர்த்திகளேயாவார்கள். நூறுகோடி பிரமர்கள் நொங்கினார் ஆறுகோடி நாராயணர் அங்ஙனே ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர் ஈறிலாதவன் ஈசன் ஒருவனே. -அப்பர் உருத்திரன்:- ஆன்மாக்களின் துன்பத்தைக் கண்டு இரங்குபவர். முக்கணன்:- சந்திரனையும் சூரியனையம் அக்னியையுங் கண்களாக வுடையவர். நக்கன்:- எப்போதும் புன்சிரிப்புடன் விளங்குபவர். மழுக்கரன்:- ஆன்மாக்களின் மலமாகிய அழுக்கைத் தகிக்கும் ஞானாக்கினியை ஏந்தியவர். சிற்குணன்:- இறைவனுடையஅருட்குணங்கள் எட்டு, அவையாவன, தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினைனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை. |