அதனால் மலைகளும் தனத்துக்கு நிகராக முடியாமல் போய் விட்டன. ககசாலக் குலத்தைக் குமைத்து:- ககம்-பட்சி. சாலம்-கூட்டம். பறவைகளின் கூட்டத்தின் தலைமையானது சக்கரவாகப்புள். அது தனத்துக்கு உவமை கூறப் பெறுவது. அது பறக்கும் இயல்புடையது. தனம் பறவாது நிலைபெற்றிருப்பதனால், அந்த சக்கரவாகப் பட்சியையும் வருந்த வைத்தது. “வல்லுச் சக்கரம் மதன்குடம்” -உசிதசூடாமணி. “சக்கிரம் வைத்தப்பொற்குட மொத்திட்டுத்திகழ் முலைமேவும்” -திருப்புகழ். பகட்டி:- பகட்டுதல்-ஆடம்பரம் செய்தல்; நன்றாக அலங்கரிக்கப் பட்டு விளங்குவது தனம். குருத்தத்துவத்துத் தவர் சோரா:- குருவாகவும், மடாதிபதிகளாகவும், துறவிகளாகவும் உள்ள முனிவர்களும் சோர்ந்து பதைபதைக்கச் செய்யவல்லது தனம். “துரவினர் சோரச்சோர நகைத்து” -திருப்புகழ். புடைத்துப்பணைத்துப் பெருக்கக் கதித்து புறப்பட்ட கச்சுத் தனமானார்:- பருத்தும் செழித்தும் மிகவும் உயர்ந்தும் தோன்றுகின்ற தனத்தையுடைய பொதுமாதர்கள். தடத்துற்பவித்து:- தடம்-குளம். சரவணப் பொய்கையில் செந்தாமரைக் கமலத்தில் முருகவேள் மூவருந் தேவரும் போற்ற அவதரித்தருளினார். மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல் நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடு நிமல மூர்த்தி அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந் தருளினானே. -கந்தபுராணம். |