எண்ணுகின்றவர்களுமாகிய அடியார்களை, மிக சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே= இவ்வுலகில் மிகவும் சொல்லி போற்றுகின்ற தன்மையை அடியேன் அறியாமல், தனத்தினில்=தனங்களிலும், முகத்தினில்=முகப் பொலிவாலும், மனத்தினில் உருக்கிடும்= சமர்த்திகள்=மனதில் உருகச் செய்யும் சமர்த்திகளுடைய, மயக்கினில் விழலாமோ= மயக்கமாகிய பள்ளத்தில் அடியேன் விழக்கடவேனோ? பொழிப்புரை கரும்பு வில்லை வளைத்து அழகிய மலர்க் கணைகளைத் தொடுத்து இயல்பாகவுள்ள செருக்குடன் ஒளிந்திருந்து எய்த வலிய மன்மதனை நெற்றியில் உள்ள நெருப்புக் கண்களால் நினைத்த மாத்திரத்தில் நெருப்பினால் வேகுமாறு எரித்தவரும், கயிலாய மலையில் வீற்றிருப்பவரும், இமாசலத்தில் வளர்ந்த உமாதேவியாருக்கு இடப்பாகந் தந்தவருமாகிய சிவபெருமான் பெற்ற இளம் பாலகரே! மேகந் தவழும் சோலைகளும், வயல்களும், ஊர்களும் இனிது செழித்துள்ள திருத்தணிகை மலை மீது விருப்புடன் உறையும் பெருமிதம் உடையவரே! இருப்பாக இருந்து உதவுகின்ற அவல் போன்ற திருப்புகழானது அன்புடன் ஓதுகின்ற அடியார்களது துன்பங்களை நீக்குகின்றது என்ற உண்மையை எடுத்துக் கூறுகின்ற இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்களை இலக்கண இலக்கியத்துடன் நான்கு கவிகளால் அன்புடன் உள்ளத்தில் தரிப்பவர்களும், வாக்கால் பாடுபவர்களும், மனத்தால் நினைப்பவர்களுமாகிய அன்பர்களை இவ்வுலகில் பாராட்டிப் புகழ்வதை அறியாதபடி, தனத்தாலும் முகத்தாலும் மயக்கி உள்ளத்தை உருக்குகின்ற ஆற்றல் படைத்த பொதுமாதர்களின் மயக்கமாகிய படுகுழியில் அடியேன் விழலாமோ? (விழக்கூடாது) விரிவுரை இருப்பவல் திருப்புகழ்:- அயலூர் செல்பவர்கள் இருப்பாக அவல் கொண்டு போவார்கள். அதனால் அதற்கு யாத்திரைத் தர்ப்பணம் என்று பேர் அமைந்தது. பசி வந்தபோது அவலை நனைத்து, பாலும் சீனியும் கலந்து, அல்லது சிறிது உப்பும் எலுமிச்சம் பழ ரசமும் கலந்தும் பல்வேறு வகையில் பக்குவஞ் செய்தும் உண்டு பசியாறலாம். வழிக்கு மிக மிகப் பயனுடையதாக இருந்து உதவுவது அவல். இதுபோல் திருப்புகழ் ஆவி பிரிந்து போகும் அத்தொலையாத தனிவழிக்குத் துணையாக இருந்து உதவும். அதனால் இருப்பவல் திருப்புகழ் என்று அருளிச் செய்தார். |