முருகா” என்று கூறும் விருப்பங் கொண்டு, மன அமைதியுடன் இருந்து ஓத பெருமை வாய்ந்த ஒப்பற்ற உள்ளம் பேறு பெறும்படியான ஞானத்தைத் தந்தருளுவீராக. விரிவுரை இத்திருப்புகழில் முதல் மூன்று அடிகள் பெண்களின் கேசாதிபாத வருணனையைக் கூறுகின்றார். சுணங்காவி கிளை:- சுணங்கு-தேமல்.ஆவி-வாசனை. கிளை-மூங்கில், பெண்களின் தோள் மூங்கில் போலவும், தேமலும் வாசனையும், நிறைந்து அழகு செய்யும். சாறு பொழியாவளம்:- சாறு பொழி அ வளம். வள்ளம்-என்ற சொல் வளம் என வந்தது. வள்ளம்- கிண்ணம். இது வயிற்றுக்கு உவமையாயிற்று. நீலவண்டேவி:- நீலம்-நீலோற்பல மலர். வண்டு - கணை. அங்காரநிறை:- அகங்காரம்-இறுகாப்பு. இறுமாப்பு நிறைந்த, அகங்காரம் என்ற சொல் அங்காரம் என வந்தது. அஞ்சாறு பொன்தோகையமை பாளிதம்:- அம்-அழகு. சாலும்-மிகுந்த. அழகு மிகுந்த பொன் சரிகைக் கரையமைந்த முன்தானையுடன் கூடிய புடவை சூழ்கின்ற பாதம். பாத செந்தாமரைகள் தாழ் பெரும்பாதை வழியே படிந்து:- முருகப் பெருமானுடைய திருவடியை வணங்குவதே உய்யும் பெரு நெறியாகும். “பெறநெறி பிடித்தொழுக வேண்டும்” என்பர். இராமலிங்கர். அமுத வாரியுண்டே பசிகள் தாபமுந் தீர:- இறைவனுடைய திருவருளாகிய ஆரமுதம் உண்டவர்க்குப் பசி தாகங்கள் பொருந்த மாட்டா. “குகனெ குருபர னே என நெஞ்சிற் புகழ்அருள் கொடு நாவினில் இன்பக் குமுளி சிவவமு தூறுக உந்திப் பசியாறி” - திருப்புகழ். |