பொய்எனப்படும். சில காலம் இருந்து பின் மறைந்து அழியக் கூடியது பொய் எனப்படும். உலக வாழ்வு நிலைபேறில்லாதது. அதனால் அது பொய் வாழ்வு. அதில் அகப்படும் சிக்கினை யகற்றுதல் வேண்டும். திணிதாய சித்ர வாக்குப் பெற்று:- “வலிமையான அழகிய வாக்கைப் பெற வேண்டு்ம்” என்று சுவாமிகள் முருகனை இங்கே வேண்டுகின்றார். முருகப் பெருமான் கொடுக்க அவர் பெற்றார். வேறு ஒருவருக்கும் இல்லாத அருமையான அழகிய இனிய வாக்கையுடையவர் அருணகிரிநாதர். வாக்கிற் கருணைகிரி வாதவூரார் கனிவில் தாக்கில் திருஞான சம்பந்தர்-நோக்கிற்கு நற்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார் சொற்குறுதிக் கப்பரெனச் சொல். செச்சை சாத்தப் பெறுவேனோ:- வாக்கினால் இறைவனை வாழ்த்த, வாழ்த்தியதற்குப் பரிசாக இறைவன் தனது திருமார்பில் உள்ள வெட்சி மாலையை வழங்கி அருள்புரிகின்றான். அப்பேற்றினைப் பெற வேண்டும் என்கிறார். கொத்து நூற்றுப் பத்து நாட்டக் கொற்ற வேத்து:- ஆயிரங்கண்களை யுடையவன் இந்திரன். சகஸ்ராட்சன் என்ற பேருடையவன். “நூற்றுப் பத்தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டேந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்” - திருமுருகாற்றுப்படை. குக்குடாத்த:- குக்குட அத்த. “சேவலங்கொடியான பைங்கர” -(மூலமந்திர) திருப்புகழ் சர்ப்ப கோத்ர:- கோத்திரம் - மலை. சர்ப்ப கோத்திரம் - நாககிரி - திருச்செங்கோடு. தத்துவ நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டு மேற்று:- தொண்ணூற்று ஆறு தத்துவங்கள். |