சூரியனையுமிழ்கின்ற சேவல் என்றனர். “ரவியுமிழ் துவசமும்” - (நெடிவட) திருப்புகழ். இருதிசை இருநாலும்:- எட்டுதிக் குடன் மேல் கீழ் ஆக பத்துத்திசை. பழைய அடியவர்......................பரவ:- இறைவனாகிய முருகவேள் அருளுருக் கொண்டு அருணகிரியார்க்குத் தோன்றி காட்சியளித்தபோது, ஒரு புறத்தே பழந் தொண்டர் செந்தமிழ்த் தீஞ்சுவைப் பாடல்களையும், மற்றொருபுறம் வேதப் பாடல்களையும் பாடித் துதித்து வந்தனர் என்னுங் குறிப்பை யன்பர்கள் உற்று நோக்குக. முன்னே தமிழையும் பின்னே வடமொழியையும் வைத்துப் பேசியிருப்பதை உய்த்துண்க. இறைவனுக்கே முன்னே வருவது தமிழ். பின்னே வருவது வடமொழி. திருமால்கோயிலில் இன்றும் இங்ஙனம் நிகழ்வது கண்கூடு. “பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலே” -குமரகுருபரர். வருமதில் அருணையில் ஒருவிசை வரவேணும்:- வரும் அதில் - வந்ததுபோல், முன்னே சொல்லிய வண்ணமாக முன் தனக்கு காட்சி தந்ததுபோல், கூற்றுவனுடன் பொருது அவனை மடியச் செய்யும் வீரப்போரைக் காண்பதற்கு இன்னொருவிசை வரவேணும் என்று சுவாமிகள் வேண்டுகின்றனர். வனிதர:- வனிதைதர என்பது கடைக்குறையாக வனிதர என வந்தது. வ(ன்)தர- நெருப்பைக் கையில் தாங்கியவரே என்றும் பொருள் கொள்ளலாம். தரணிதரதநுதர:- தரணிதர - .பூமியைத் தாங்குபவர். தநு தர - மேருகிரியை வில்லாகத் தரித்தவர். தரணிதர - .மலை; (மேரு) மலையகிய வில்லைத் தரித்தவரே என்றும் பொருள் கொள்ளலாம். சசிதரு மயில்:- தெய்வயானையம்மையாரை, இந்திரனுக்கும் இந்திராணிக்கும் புதல்வி என்பது உபசாரம். அமுதவல்லியம்மை தானே குழந்தையாகி இந்திரனிடம் செல்ல, அவன் சூரனுக்கஞ்சி மேருகிரியில் ஒளிந்திருந்தானாதலின், ஐராவதத்திடம் தர, அது |