பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 191

 

நிறைவேறும் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்து, முல்லையரும்பு போன்ற பற்களையுடைய பொது மாதர்களைக் கொட்டிக் கொடுத்து, பொன் இல்லையென்று சொல்ல, ஏமாற்றுபொருட்டு பொய்வழியைச் சிந்தித்தும், வறுமையை நினைத்து வருந்தியும் இவ்வாறு மனம் நைந்து வருந்துதல் தக்கதாமோ? தகாது.

விரிவுரை

கட்டமன்னுமள்ளல்:-

கட்டம் மன்னும் அள்ளல். கஷ்டம் என்ற சொல் கட்டம் என வந்தது. அள்ளல்-சேறு. உதிரச் சேற்றுடன் கூடிய உடம்பு. துன்பம் நிறைந்த உடம்பு.

“அள்ளற்பை”                   - (கள்ளக்) திருப்புகழ்.

கொட்டி பண்ணுமைவர்கட்கு மன்னுமில்லம்:-

கொடு கொட்டி என்பது ஒருவகைக் கூத்து. இந்த உடம்பாகிய வீட்டில், ஐம்புலன்களாகிய வேடர்கள் இருந்து அவர்கள் விருப்பப்படி இதனைக் கூத்தாட வைக்கின்றார்கள்.

“குப்பாச வாழ்க்கையில் கூத்தாடுமைவரிற் கொட்படைந்த
   இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்”       - கந்தரலங்காரம் (14)

இதுபேணி:-

இன்று இருந்து நாளையழியும் அசுத்தமான இந்த உடம்பையே பேணி மாந்தர் அவமேயுழன்று அழிகின்றார்கள். இறைவனுடைய அடிபேணி உய்தல் வேண்டும்.

ஆன்மா சிவத்துடன் ஒன்றி பிறவித்துயரை ஒழிப்பதற்குச் சாதனைகள் என்ன என்பதனை குருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

(1)  தனது பெருமையை எண்ணாமை.

(2) நான் என்ற தற்போதம் மாய்தல்.

(3)  ஒருவரிடத்தில்ஒரு பொருளை யாசிக்காமை.

(4)  ஊன உடம்பை பழித்தல்.

இந்த நான்சாதனைகளைச் செய்தால் சிவாத்துவிதம் பெற்றுப் பிறப்பை யொழிக்கலாம்.

தன்பெருமை யெண்ணாமை தற்போத மேயிறத்தல்
மின்பெருமை யாசகத்தை வேண்டாமை-தன்பால்
உடலைப் பழித்தல் ஓங்குசிவத்தொன்றல்
நடலைப் பிறப்பொழியும் நாள்       - சிவபோகசாரம்.

ஆதலால்அருணகிரிநாத சுவாமிகள் பல பாடல்களில் இந்த உடம்பைப் பழித்து ஓதுகின்றார்.