சீவன் சிவனாகும் பரமார்த்த தரிசனையைத் தேவரீர் வந்து அருள் புரிவீராக. விரிவுரை இத்திருப்புகழில் முதல் மூன்றடிகளில் மாதர்களின் கேசாதி பாத வர்ணனை வருகின்றது. ஏனைய புலவர்கள் மாதர்களின் இடைக்குத் துடியை உவமை கூறுவர். அருணகிரிநாதர் தெய்வப் புலவர் ஆதலின் சிவபெருமானுடைய திருக்கரத்திலுள்ள துடிக்கு நிகரான இடை என்கிறார். மாணிக்கவாசகர் திருக்கோவையாரிலும் உவமை சிவ சம்பந்தமாகவே வரும். ஈசற் குயான் வைத்த அன்பின் அகன்று, அவன் வாங்கிய என் பாசத்தின் காரென்று, அவன்தில்லையின் ஒளிபோன்று,அவன்தோள் பூசத்திரு நீறென வெளுத்து, ஆங்கவன் பூங்கழல்யாம் பேசத்திருவார்த் தையிற்பெறுநீளம் பெருங்கண்களே, -திருக்கோவையார் (109) சீவனொன்றான பரமார்த்த தரிசனை:- களிம்பு நீங்கியவுடன் செம்பு பொன்னாவது போல் மல நீக்கம் பெற்றவுடன் சீவன் சிவமாம் வெற்றியைப் பெறுகின்றது. “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்”- திருவாசகம். “சீவன் சிவசொரூபம் என தேறி” - (தேனுந்து) திருப்புகழ் வேகமுண்டாகியுமை:- பிற்பகுதியில்தக்கயாக சங்காரத்தைக் கூறுகின்றார் வேகம் - கோபம். “ஓவா வேகமோ டுருத்து” - கலித்தொகை (முல்லை3) சிவநிந்தை செய்த தக்கனுடைய யாகத்தை அழிக்குமாறு இறைவி இறைவனிடம் விண்ணப்பஞ் செய்தார். சிவமூாத்தியின் கோபக்கனலில் வீரபத்திரரும், அம்பிகையின் சீனத்தீயில் பத்ரகாளியும் தோன்றினார்கள். வீரபத்திரர் சந்திரனைத் தேய்த்தும், பகலவன் பல்லை உடைத்தும், அக்கினியின் கரத்தைத் திரித்தும், நாமகளின் நாசியைக் கொய்தும், தக்கன் தலையைத் தடிந்தும் பல தண்டனைகளைச் செய்தருளினார். “சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமுமுன்னியங்கு பருதியான் பல்லும் இறுத்தவர்க்கருளும்பரமனார்” “தக்கனதுபெறு வேள்விச் சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி |