தங்கூறை கொடு மரமில்:- ஆயர்பாடியில் கோபிகன்னிகைகள் கண்ணனைக் கணவனாகப் பெறும்பேற்றை விரும்பி மார்கழி மாதம் 30 நாட்களும் யமுனையில் நீராடி கௌரிநோன்பு நோற்க, முடிவு நாளையில், விரத பலனைத்தரும் பொருட்டும், ஆடையின்றி நீராடுவது தவறு என்பதையுணர்ந்தும் பொருட்டும் கண்ணபிரான் அவர்கள் ஆடைகளை கவர்ந்து மரத்தின்மீது ஏறி அவர்கள் வணங்க அளித்த வரலாற்றைத் தெரிவிக்கும் விரிவை, திருப்புகழ் விரிவுரை 3ஆம் தொகுதி 65ஆம் பக்கத்தில் காணவும். மரமில் என்பதில் அத்துச்சாரியை கெட்டிருக்கின்றது. எழு என்பது சந்தத்தையொட்டி ஏழு என நீட்டல் விகாரம் பெற்றது. தென்சேரிகிரி:- இத்திருத்தலம். கோயமுத்தூர் ஜில்லா, பல்லடத்திற்குத் தெற்கே 12 மைல் தூரத்தில் உள்ளது. கருத்துரை திருமால் மருக! தென்சேரிகிரி நாதா! மாதர் மயக்கமாகிய கடலினின்று கரையேறி உய்ய அருள்புரிவீர். கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு கண்டாரைச் சிந்துவிழிகொடு கொந்தாரச் சென்ற குழல்கொடு வடமேருக் குன்றோடொப் பென்ற முலைகொடு நின்றோலக் கஞ்செய் நிலைகொடு கொம்பாயெய்ப் புண்டவிடைகொடு பலரோடும் பண்டாடச் சிங்கி யிடுமவர் விண்டாலிக் கின்ற மயிலன பண்பாலிட் டஞ்செல் மருளது விடுமாறு பண்டே செற் றந்து பழமறை கொண்டேதர்க களங்களறவுமை பங்காளர்க் கன்று பகர்பொருள் அருள்வாயே வண்டாடத் தென்றல் தடமிசை தண்டாதப் புண்ட ரிகமலர் மங்காமற் சென்று மதுவைசெய் வயலூரா |